புறம் கூறாதீர்கள்
இன்றைய மனித சமுதாயத்தில் பொதுவான இரண்டு பேர் சந்தித்து கொண்டால் அவர்கள் பேசுவது யாராவது ஒரு மூன்றாவது நபரைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. இவர் இப்படியாமே, அவர் அப்படியாமே என்று மூன்றாவது நபரின் குற்றம் குறைகள் யாவும் விமரிசிக்கப்படும் இடமாக இன்றைய பொது இடங்கள் ஆகிவிட்டன. இது சம்பந்தமாக நண்பர் ஒருவர் சொன்ன சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. நான்கு பேர் ஒரு இடத்தில் கூடி பேசிக் கொண்டிருந்தார்களாம். நான்கு பேரில் ஒருவர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றதும், எஞ்சியிருந்த மற்ற மூன்று பேரும் எழுந்து சென்ற மனிதரைப் பற்றி பேசினார்களாம். சிறிது நேரத்தில் மூன்றாவது நபர் அந்த இடத்தை விட்டுச் சென்றதும் எஞ்சியிருந்த மற்ற இரண்டுபேரும் மூன்றாவது நபரைப் பற்றி பேசினார்களாம். இரண்டு பேரில் இரண்டாவது நபர் அந்த இடத்தை விட்டுச் சென்றதும், எஞ்சியிருந்த ஒருவர் தனது முகவாய்க் கட்டையினால் தனது தோளில் உரசி சென்று கொண்டிருந்த அந்த நபரைப் பழித்து காட்டினாராம். இதுதான் இன்றைய மனிதர்களின் பொதுவான நிலை. இவ்வாறு இல்லாத ஒருவரைப் பற்றி புறங்கூறுவது பாவமான செயல் என்று இஸ்லாம் சுட்டிக்காட்டுகின்றது.
புறங்கூறுபவர்களைப் பற்றி அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்:
'முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள், ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்;லாஹ்;வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்;லாஹ்; ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்" (அத்தியாயம் 49 ஸ{ரத்துல் ஹ{ஜுராத் - ன் 12வது வசனம்)
நீங்கள் பிறருடைய குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்றும், சந்தேகமான பல எண்ணங்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள் என்றும், சந்தேகமான எண்ணங்களில் சில பாவங்களான இருக்கும் என்றும் அருள்மறை குர்ஆன் உண்மையான முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுகிறது. இவ்வாறு பிறருடைய குறைகளைத் துருவித் துருவி ஆராய்வது தம் இறந்து போன சகோதரனின் மாமிசத்தைப் புசிப்பதற்கு சமம் என்றும், அல்லாஹ்வுக்கு அஞ்சி அதுபோன்ற பாவத்திலிருந்தும் மீள்வதால் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பான் என்றும் அருள்மறை குர்ஆன் பாவமீட்சிக்கு வழியும் காட்டுகிறது. ஆனால் இவைகளைப் பற்றி கவலையில்லாத சமூகத்தின் எல்லா மட்டமும், அதன் முக்கிய அலுவலே பிறறைப் பற்றி புறங்கூறுவது என்கிற ரீதியில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு குறைகூறிப் புறம்பேசித் திரிபவர்கள் அனைவருக்கும் கேடுதான் என புறம்பேசுபவர்களுக்கு அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் எச்சரிக்கை விடுக்கின்றான். எச்சரிக்கை விடுப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றான்.
'குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹ{தமாவில் எறியப்படுவான். ஹ{தமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்;லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)" (அத்தியாயம் 104 ஸ_ரத்துல் ஹ{மஜா 1 முதல் 9 வசனங்கள் வரை).
இவ்வாறு புறங்கூறுபவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளைக் காண்போம்.
புறம் கூறுதல் என்பது யாது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'உமது சகோதரர் வெறுக்கக்கூடிய ஒன்றை நீர் பேசுவதே புறம்" என்றார்கள். நான் கூறுவது உண்மையிலேயே அவர்களிடம் இருந்தால்..? எனக் கேள்வி கேட்டவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் கூறக்கூடியது அவரிடம் இருந்தால்தான் நீர் புறம்பேசியவராவீர். அவரிடம் அக்குறை இல்லையெனில் நீர் அவதூறு கூறியவராவீர்" என்று விளக்கமளித்தார்கள் என அப+ஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கக் கூடியச் செய்தி திர்மிதீ என்ற ஹதீஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புறம் கூறுதல் என்றால் என்ன கேள்விக்கு விளக்கமளித்த அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒருவரிடம் இருக்கும் குறைகளைப் பற்றி, அவர் இல்லாத நேரத்தில் பேசுவது என்று தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். அவ்வாறான குறைகள் இருந்தாலும் அதைப்பற்றி பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவ்வாறு பேசக் கூடிய குறையானது அந்த மனிதரிடம் இல்லாமல் இருந்தால் - பேசியவர் அவதூறு சொன்ன குற்றத்திற்கு ஆளாவார் என்றும் எச்சரிக்கிறார்கள்.
ஒரு மனிதரிடம் ஒருகுறை இருந்தாலும் அதை நாம் பிறரிடம் பேசித் திரியக் கூடாது. அவ்வாறான குறை அந்த மனிதரிடம் இல்லை எனும் பட்சத்தில் நாம் அந்த மனிதர் மீது அவதூறு கூறிய பாவத்திற்கு ஆளாகிறோம் என்பதையும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்த மேற்கண்ட செய்தியிலிரு
|