நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!
( தொடர்- 5 )
கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
( தொடர்- 1 ), ( தொடர்- 2 ) , ( தொடர்- 3 ) , ( தொடர்- 4 )
என் அன்பிற்குரியவர்களே,நான் இன்னும் மதீனாவை விட்டும் வெளியே வரவில்லை,வரவும் மனமில்லை.
உஹது மலையின் அடிவாரத்தில் உஹதுப்போரின் சாட்சிகளாக மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எம்பெருமானாரின் சின்னவாப்பா ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களையும்,
அண்ணலெம்பெருமானாரின் அன்புக்கட்டளையை கடமையாய் கருதி உஹதுப்போரில் வீரமரணமடைந்த ஷஹீதுகளான மற்ற நபித்தோழர்களையும் ஜியாரத் செய்துவிட்டு மஸ்ஜிதுல் குபாவை நோக்கி எனது பயணம் தொடர்கிறது.
உஹதுமலையிலிருந்து மஸ்ஜிதுல்குபா 5கி.மீட்டர் தூரமிருக்கும் என நினைக்கிறேன்,இந்த இடத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்,
இஸ்லாத்தின் வரலாற்று சிறப்புமிக்க பத்ருப்போரின் வெற்றிக்கு தங்களையே மதீனாவின் உஹதுமலை அடிவாரத்தில் விதைத்துக்கொண்டவர்கள்தான் உஹதியீன்கள்.
அவர்களது வீரமரணம்தான் முன்னெச்சரிக்கை என்ற அடிப்படையில் பத்ருப்போரில் மிகவும் சாதுரியமாக நபிகள் கோமான் (ஸல்)அவர்களின் அணுகுமுறை அமைந்தது.
அதுவே பத்ரு வெற்றியென பதிவு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...
இந்த நினைவுகளோடுதான் எனது மஸ்ஜிதுல்குபா பயணம் தொடர்ந்தது.
நான் 7ஆண்டுகாலம் அரபிக்கல்லூரியில் பல்வேறு ஹதீது நூல்களையும்,திருக்குர்-ஆனின் விரிவுரைகளையும் கற்றுணர்ந்த விஷயங்களை இஸ்லாமிய வரலாற்றோடு பிண்ணிப்பிணைந்திருக்கும் புனித இடங்களில் நின்று கொண்டு நினைத்து பார்த்த போது கிடைத்த அனுபவத்தை என்னவென்று சொல்வேன்?
ஏதோ?மக்காசென்றோம்,மதீனாசென்றோம் என்றில்லாமல் அந்த இடங்களுக்கு செல்வதற்கு முன்பாகவே அந்தந்த இடங்களின் சிறப்பைப்பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் ஓரளவுக்காவது வரலாற்று நூல்களை படித்துவிட்டு சென்றோமானால்,
ஒவ்வொரு இடத்திலும் நாம் கால்வைக்கும் போது கண்மணி நாயகம் (ஸல்)அவர்களுடனும்,அவர்களின் தோழர்களான சத்தியசகாபாக்களுடனும் இணந்திருப்பதுபோல் ஒரு பிரம்மை ஏற்படும்.இது என் அனுபவத்தில் நான் கண்டது.
இதுபோன்ற பல்வேறு ரம்மியமான சிந்தனைகளுக்கிடையில் மஸ்ஜிதுல்குபா வந்து சேர்ந்தேன்.மாஷா அல்லாஹ்....
மஸ்ஜிதுல்குபாவை கண்டதும் உணர்ச்சிப்பெருக்கால்,என் கண்களிலிருந்து தாரை,தாரையாய் வழிந்தோடிய கண்ணீர்த்துளிகளை கூட துடைக்கமுடியாமல் சட்டென பள்ளிக்குள் நுழைந்தேன்.
பள்ளியின் நாலாபுறத்திலும் ஓடினேன்,அங்குமிங்கும் தேடினேன்,ஏன் தெரியுமா?????
(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)
இன்ஷா அல்லாஹ்...தொடரும்.....
|