பாகம் 18
ஒவ்வொரு வருடமும் எகிப்திய மக்கள் நைலின் வெள்ளப் பெருக்கிற்கு காத்திருப்பார்கள். வெள்ளம் வந்து வடிந்தப் பிறகு விவசாயத்தை மேற்கொள்வார்கள். மிக எளிதான வேலை. ஆனால் எகிப்தியர்களின் விவசாய உற்பத்தியை எளிதாக்கி பெரும் செழிப்பை தரும் நைலின் வெள்ளப் பெருக்கே அவர்களின் உயிருக்கும் உலைவைக்க கூடியது. வெள்ளப் பெருக்கு மிக அதிக அளவில் இருந்தால் நைல் நெடுக்க இரு கரையோரமாக இருக்கும் எகிப்திய நகரங்களும் நீருக்குள் முழ்கிவிடும். வெள்ளம் வடிந்துவிட்டாலும் அதிக நீர் தேங்கிய நிலம் விவசாயம் செய்ய விடாமல் செய்துவிடும். அந்த வருடம் பஞ்சம்தான். நைலில் வெள்ளப் பெருக்கு குறைந்தாலும் பிரச்சனைதான். விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்துவிடும். பஞ்சம்தான்.
இதை சமாளிக்க நீர்பாசன முறைகளை எகிப்தியர்கள் கண்டுபிடித்திருந்தாலும் அது நிரந்தரத் தீர்வாக அமையவேயில்லை. நைலின் வெள்ளப் பெருக்கு என்பது அதிகரித்தாலும் சரி குறைந்துவிட்டாலும் சரி அளப்பரியது. நைலின் வெள்ளப் பெருக்கிற்கு உதாரணம் வெள்ள நீர் இரண்டு கறைகளையும் தாண்டி பாலைவன மணற்பரப்பில் ஏறி வழியக் கூடியது. எகிப்தின் வரலாறு நெடுக இந்த வெள்ள நீர் இரு கரைகளிலும் சில பாலைவனச் சோலைகளையும் உருவாக்கி இருக்கிறது. இத்தகைய சக்திப் படைத்த நைலின் வெள்ளப் பெருக்கை நிச்சயத் தன்மையுடன் நிதானிக்க முடியாது என்பதுதான் எகிப்தியர்களைப் பொறுத்த வரை அதன் பாதகமான விசயம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் நைலின் வெள்ளப் பெருக்கு நிச்சயத்தன்மையற்றது.
தொல் பழங்கால எகிப்தியர்களின் உலகப் படைப்பு கோட்பாடும் நைல் நதியின் வெள்ளப் பெருக்கை அடிப்படையாக கொண்டதே. படைப்புக் கடவுளான Nun (பிற்காலத்தில் Ra கடவுளுக்கும் Nun கடவுளுக்கும் பெரும் வித்தியாசமில்லாமல் போனது) மிக மிக தொல் பழங்காலத்தில் நைல் நதியில் ஏற்பட்ட ஒரு வெள்ளப் பெருக்கு வடிந்தப் பிறகு உருவான மணல் முகடில் முளைத்திருந்த தாமரை மலரில் தோன்றியதாக கி.மு. 3000 வருடங்களுக்கு முற்பட்ட எலும்புத் துண்டு எழுத்துகள் சொல்கின்றன.
எகிப்திய மக்கள் செழிப்பான நிலப்பகுதியை kemet (கருமை) என்று அடையாளப்படுத்தினார்கள். மூன்று திசையிலும் பரந்து கிடக்கும் பாலைவனத்தை deshret (சிவப்பு) என்று அழைத்தார்கள். அன்றாடம் நேரம் தவறாமல் உதிக்கும் சூரியன் நைல் நதியின் இரு கரைகளிலும் இருக்கும் பயிர்களுக்கு உயிர் கொடுப்பதால் நைலின் இரு கரையையும் The Land of Living என்றார்கள் எகிப்தியர்கள். சூரியன் மறையும் திசையான மேற்கை மரணத்தின் குறியீடாகப் பார்த்ததால் மேற்கு திசையில் இருக்கும் பரந்த பாலைவனத்தை The Land of Dead என்று அழைத்தார்கள். இதன் காரணமாகவே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அரசர்களையும் பிற்காலத்தைய பாரோக்களையும் அடக்கம் செய்யவும் அவர்களுக்கான கல்லறைகளையும், மஸ்டபாக்களையும், பிரமிடுகளையும் கட்டவும் மேற்கு திசையிலிருந்த பாலைவனத்தை தேர்ந்தெடுத்தார்கள்.
நைல் நதி எகிப்தில் ஓடி மத்தியத் தரைக்கடலில் கலக்கும் வழி நெடுக்க பல சிறிய நீர்வீழ்ச்சிப் போன்ற அமைப்பை ஏற்ப்படுத்தி செல்கிறது. இதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் first, second……cataracts என்று பிரித்திருக்கிறார்கள். இவைகளே சில மாநிலங்களின் எல்லைகளாக அமையக் கூடியவைகள். நார்மரின் காலத்தில் எகிப்தில் 42 மாநிலங்கள் இருந்திருக்கின்றன. இந்த மாநிலங்களைக் கட்டுப்படுத்த Nomarch-களை ஆளுநர்களாக நியமித்தான் நார்மர். பாரோக்களைவிட இந்த ஆளுநர்களையே எகிப்திய மக்கள் பெரிதும் சார்ந்திருந்தார்கள். நைலில் வெள்ளப் பெருக்கு பொய்த்துப்போனால் உண்டாகும் பஞ்சத்தைப் போக்க உடனடியாக செயல்படுபவர்கள் இவர்களே.
அடுத்த தொடரிலும்......
.
பாகம் 19
எகிப்தின் உண்மையான அதிகாரம் என்பது அதன் மாநிலங்களின் ஆளுநர்கள் கைகளிலேயே இருந்தது. பாரோக்கள் இவர்களை தங்களின் கைகளுக்குள் வைத்துக்கொண்டதன் மூலமே எகிப்திய நாகரீகத்தை உச்ச நிலைக்கு கொண்டுபோனார்கள். இப்படி சொல்வது வேண்டுமானால் சாதரணமான காரியமாக இருக்கலாம் ஆனால் உண்மையில் மாநிலங்களின் ஆளுநர்களை வழிக்கு கொண்டுவர பாரோக்கள் அனைத்து விதமான சாத்தியக் கூறுகளையும் கையாண்டிருக்கிறார்கள். இவர்கள் மேல் படையெடுத்தும் கூட சென்றிருக்கிறார்கள்.
இவர்களை வழிக்கு கொண்டுவர பாரோக்களுக்கு இருந்த மிக எளிய வழி இவர்களுக்கு பட்டங்களையும் அதிகார சலுகைகளையும் வாரி வழங்குவது. இவைகள் எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான சலுகை ஆளுநர்களும் பாரோக்களுக்கு நிகராக மஸ்டபாக்களையும் கல்லறை கோயில்களையும் (mortuary temple) கட்டிக்கொள்ளலாம் என்பது. எகிப்தியர்கள் எப்படி மரணத்தை கொண்டாடக் கூடியவர்கள் என்பதை முன்பேப் பார்த்தோம். பாரோக்களைப் போல தங்களுக்கான மஸ்டபாக்களை கட்டிக்கொள்வது என்பது ஆளுநர்களுக்கு மிகப் மிகப் பெரிய மரியாதையையும் மதிப்பையும் கொடுக்க கூடிய விசயம். இந்த ஒரு சலுகைக்காகவே பரோக்களின் எல்லா கட்டளைகளுக்கும் தாளம் போடுவார்கள்.
பாரோக்கள் இப்படியான சலுகையை தருவது என்பது சாதாரணப்பட்ட காரியமல்ல அரசின் கசானாவையே தீர்த்துக்கட்டும் சலுகை இந்த சலுகை. ஒரு பாரோ எவ்வளவு ஆளுநர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த சலுகையைத் தருகிறாரோ அவ்வளவிற்கு தன்னுடைய கசானாவிற்கு தானே வேட்டு வைத்துக்கொள்கிறார் என்று அர்த்தம். இருந்தாலும் முதல் பாரோவான நார்மர் தொடங்கி இந்த சலுகை மிகவும் நம்பிக்கையான அதே சமயத்தில் பணிவுள்ள Nomarch-களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு நிபந்தனை உண்டு. பாரோவின் மஸ்டபாச் சுவர், மம்மியை வைக்கும் sarcophagus, கல்லறை கோயில் சுவர்கள் ஆகியவிற்றில் மட்டுமே மறு வாழ்வு பயணத்திற்கும் மறு வாழ்வு உயிர்தெழுதலுக்கும் உதவும் The Book of the Dead, The Book of the Breathing மற்றும் The Book of the Way புத்தகங்களின் பாடல்களையும் மந்திரச் சொற்களையும் எழுதவேண்டும்.
பாரோவைத் தவிர மற்றவர்கள் இந்த புத்தகங்களின் பாடல்களையும் மந்திரச் சொற்களையும் தங்களுடைய மஸ்டபாக்களிலும், கல்லறை கோயில்களிலும், சவப் பெட்டிகளிலும் (coffin) பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. காரணம் பாரோவே பூமியில் ரா மற்றும் ஓரஸ் கடவுள்களின் பிரதிநிதி என்பதால் அவருக்கு மட்டுமே மறு வாழ்வு உயிர்தெழுதலுக்காக இந்த மந்திரங்களையும் பாடல்களையும் பயன்படுத்தும் உரிமை இருந்ததாக கருதப்பட்டது. பாரவோவின் மனைவி உட்பட வேறு யாருக்கும் இந்த உரிமைக் கிடையாது என்று தடைச் செய்யப்பட்டிருந்தது.
இந்த சலுகைக் கிடைக்கப் பெறாதா அதே சமயத்தில் பாரோவின் தலைமைக்கு கட்டுப்பட விரும்பாத Nomarch-கள் பாரோனிக் (pharaonic) வரலாறு நெடுக தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்துக்கொண்டே இருந்தார்கள். நார்மருக்குப் பிறகு சுமார் 300 ஆண்டுகள் கழித்து பாரோக்களின் ஆட்சியை மிரட்டும் கிளர்ச்சி ஒன்று உருவானது. இரண்டாம் வம்ச காலகட்டத்தின் முடிவில் இது நடந்தது. நார்மர் உருவாக்கிய பாரோ வம்சம் முன்னூறே ஆண்டுகளில் முடிவிற்கு வர இருந்த சமயத்தில் பாரோ Khasekhemwy தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்த Nomarch-களின் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட வேட்டையாடி கிளர்ச்சிகளை ஒரு முடிவிற்கு கொண்டுவந்தான். இது நடந்தது சுமார் கி.மு. 2650 வாக்கில். இவன் மட்டும் இல்லாது போயிருந்தால் எகிப்திய நாகரீகத்தின் தலையெழுத்து வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும். இவன் காலத்திற்கு பின்னால் வந்த பாரோ Khufu கட்டிய The Great Pyramid at Giza என்கிற உலக அதிசையங்களில் ஒன்று நமக்கு கிடைக்காமல் போயிருக்கும்.
(படத்திலிருப்பது பாரோ Khasekhemwy-யின் சிலை. இன்றையிலிருந்து 4000 வருடங்களுக்கு முற்பட்டது)
இவன் காலத்திற்கு பின்னால் தோன்றிய பாரோக்கள், தங்களுடைய ஆட்சி நிலைக்க வேண்டுமானால் மேலும் மேலும் அதிகமாக Nomarch ஆளுநர்களை சாந்தப்படுத்த வேண்டும் என்கிற இடைவிடாத நிர்பந்தத்தின் காரணமாக கண்ணில் படும் ஆளுநர்களுக்கெல்லாம் பிரமிடுகளும் அதோனோடு கூடிய கல்லறை கோயில்களையும் தங்களுடைய சொந்த செலவிலேயே கட்டிக் கொடுக்கும் சலுகைகளை வாரி வாரி வழங்கினார்கள். (பாரோ Khasekhemwy-க்கு அடுத்து பாரோவாக பதவியேற்ற பாரோ Djoser-யே உலகின் முதல் பிரமிடைக் கட்டியவன். இவன் கட்டியப் பிரமிட் Step Pyramid வகையைச் சேர்ந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் Pyramid-களின் தந்தைப் போன்றது இந்த Step Pyramid)
அடுத்த தொடரிலும்......
பாகம் 20
தன்னுடைய அரசவையைச் சேர்ந்தவர்களுக்கும் ஆளுநர்களுக்குமான பிரமிடுகளையும் கல்லறைக் கோவில்களையும் கட்டுவதுடன் மாத்திரம் ஒரு பாரோவின் கடமை முடிந்துவிடாது. (இவைகளுக்கே அரச கருவூலம் பாதி காலியாகிவிடும் என்பது வேறு விசயம்.) அவைகளில் உலகம் இருக்கும் வரைக்கும் வருடத்தின் 365 நாட்களுக்கும் நாளின் மூன்று வேலையும் உணவுகள் படைப்பதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும். எக்காரணத்தை கொண்டும் இந்த உணவு படைக்கும் காரியம் மட்டும் நிறுத்தப்படவே கூடாது. மேலும் அந்த கல்லறைக் கோயில்களை பராமரிக்கும் பூசாரிகளுக்கும் மாத சம்பளமும் கொடுத்தாக வேண்டும். இந்த காரியங்களில் சிக்கனத்தை கடைபிடிக்க முடியாது அப்படி செய்வது பாரோவிற்கு அவமானம்.
தன்னுடைய பிரமிட் மற்றும் கல்லறைக் கோயில்களை கட்டுவதும் அவைகளில் வருடம் முழுக்க உணவுப் படைக்க ஏற்பாடு செய்வதுமே ஒரு பாரோவிற்கு பெரும் பொருளாதார சுமையாக இருக்கும்போது தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இதை செய்வதென்றால் பாரோவின் அரச கருவூலம் தாக்குப்பிடிக்குமா? தாக்குப்பிடிக்கவில்லை. பாரோக்கள் ஆளுநர்களை அளவிற்கு அதிகமாக சாந்தப்படுத்த முயற்ச்சி செய்ததின் விளைவு, யாரை தங்களின் அதிகாரத்திற்கு கீழ் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டுமோ அவர்களையே பாரோக்கள் கையாளாகதாவர்களைப் போல மேலும் மேலும் சார்ந்திருக்கும்படியானது. இதுப் போதாது என்று பாரோவின் குடும்பத்தினரே பாரோவின் தனிப்பட்ட உரிமையில் (பிரமிடுகளிலும், சவப்பெட்டியிலும், கல்லறை கோவில்களிலும் எழுதப்படும் மறு வாழ்விற்கான மந்திரச் சொற்கள்) பங்கு கேட்டு பிரச்சனை செய்தார்கள்.
இதை முதலில் தொடங்கிவைத்தது ஆறாவது வம்சாவளியின் கடைசி பாரோவான Pepi II-வின் ஒன்றுவிட்ட சகோதரி Neith. இது நடந்தது கி.மு. 2200 வாக்கில். அவள் தன்னுடைய பிரமிடில் The Book of the Dead, The Book of the Breathing மற்றும் The Book of the Way ஆகியவைகளின் சடங்குப் பாடல்களையும் மந்திரச் சொற்களையும் எழுதிக்கொண்டால். பாரோவின் தனிப்பட்ட உரிமை பறிபோனது. பாரோவின் பலம் ஆதாள பாதாளத்திற்கு போய்விட்டது என்பதற்கான வெளிப்படையான மற்றும் வலுவான ஆதாரம் Neith இந்த நடவடிக்கை. இவளைத் தொடர்ந்து Nomarch-களும் தங்களுடைய பிரமிடுகளிலும் கல்லறைக் கோவில்களிலும் மறுவாழ்விற்கான மந்திரச் சொற்களை எழுதத் தொடங்கிவிட்டார்கள். வெந்தப் புண்ணில் உப்பை வைத்துத் தேய்க்கும் கதையாக பாரோ, Nomarch-களுக்கும் தன்னுடைய அரசவை சகாக்களுக்கும் சொந்த செலவில் கட்டித்தரும் பிரமிடுகளிலும் இந்த மந்திரச் சொற்கள் எழுதப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான்.
(புகைப்படத்தில் மணல்மேடாக இருப்பது பாரோ Ibi-யின் பிரமிடு)
பாரோக்களின் கருவூலம் தேய்ந்துக்கொண்டேப் போக Nomarch-களின் பலம் மீண்டும் வளர்ந்துக்கொண்டே வந்தது. இதன் விளைவு பாரோ Pepi II-க்கு பிறகு வந்த பாரோக்களால் அவர்களுடைய சொந்த பிரமிடுகளையே கட்ட முடியாமல்போனது. காரணம் பின்னால் வரும் பாரோக்கள் சேர்ந்தார்போல ஒரு வருடத்திற்கு ஆட்சியில் இருந்தாலே மிகப் பெரிய விசயமாக பார்க்கப்பட்டது. எகிப்திய கட்டிட வல்லுனர்கள் அந்த குறிப்பிட்ட பாரோவின் பிரமிடிற்கான அஸ்திவார பணிகளைக் கூட முடித்திருக்க மாட்டார்கள் நிமிர்ந்துப் பார்த்தால் அந்த பாரோவிற்கு பதிலாக ஆட்சியில் வேறு ஒரு பாரோ உட்கார்ந்திருப்பார். சரி இந்த பாரோவிற்கே இந்த பிரமிடை கட்டிவிடலாம் என்று சுற்றுச் சுவரை எழுப்பிவிட்டு உட்காரும் நேரத்தில் வேறு ஒரு பாரோ ஆட்சியில்.
எட்டாவது வம்சாவளி காலகட்டத்தின் (கி.மு. 2175 - 2125) இடைப்பட்ட ஆண்டுகளில் அஸ்திவாரம் எடுக்கப்பட்டு அந்த நிலையிலேயே கைவிடப்பட்ட பாரோகளின் பிரமிடுகள் நிறைய உண்டு. இந்த காலகட்டத்தை சேர்ந்த பாரோ Ibi மட்டுமே பிரமிடு கட்டும் அளவிற்கு முழுமையாக ஆட்சியிலிருந்தவன். இப்படி ஊசலாடிக்கொண்டிருந்த பாரோக்களின் வல்லமை எட்டாவது வம்சாவளியின் இறுதி பாரோ Neferirkara-வோட முடிவிற்கு வந்தது. Nomarch-களின் பலம் முழுமையாக பாரோனிக் சகாப்தத்தை சாய்த்துவிட்டது. முதல் பாரோ நார்மர் தொடங்கிவைத்த பாரோ வம்சம் மம்மியாகி பிரமிடிற்குள் போய்படுத்துக்கொண்டுவிட்டது. அது மீண்டும் உயிர்தெழவைக்கப்பட அடுத்த 100 வருடங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது.
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பல மாநிலங்களாக பிரிந்துக் கிடந்த எகிப்தில் மிகவும் பலம் பொருந்திய மாநிலமாக இருந்தது Herakleopolis (இன்றைக்கு இது Ihnasya el-Medina நகரம்) இது எகிப்தின் மத்தியப் பகுதி. இதன் அரசனாக இருந்தவன் Kheti. மிக கொடூரமான அரசனாக இருந்தவன் என்று எகிப்திய வரலாற்று ஆசியிரியர் Manetho பதிவு செய்கிறார். எகிப்தின் அடுத்த பாரோவாக வந்துவிடவேண்டும் என்கிற முனைப்பில் மற்ற மாநிலங்களின் ஆளுநர்களின் மீது படையெடுத்து அகப்படும் ஆளுநர்களை கொடூரமாக கொலை செய்துக்கொண்டிருந்தான். தன்னை எதிராக மூச்சுக் கூட விடக்கூடாது என்பதை மறைமுகமாக தெளிவாக்கியது அவனுடைய செயல்கள்.
அடுத்த தொடரிலும்......