"துஆ" என்பது வெறும் சம்பிரதாயமல்ல,வணக்கமாகும்!
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹழ்ரத் நுஃமான் பின் பஷீர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:"துஆ" அதுவே இபாதத்(இறைவணக்கம்)ஆகும்.(நூல்:அபூதாவூது,திர்மிதி)
இன்றைய மனிதர்களில் சிலர் சிலரை சந்திக்கும் போது பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்து விடை பெறும் முன்னர் ஏதாவதொரு விடயத்தை முன்னிறுத்தி துஆ செய்யுங்க பாய் என்று சொல்வதை காண முடிகிறது.
எதிர் முனையில் இருப்பவரும் அல்லாஹ் போதுமானவன் கண்டிப்பாக துஆ செய்கிறேன் என்று சொல்லி விடைபெற்று கொள்கின்றனர்.
ஆனால் துஆ செய்ய சொன்ன நபருக்கு அடுத்த மனிதர் துஆ செய்கிறாரா?செய்தாரா?என்றால் கேள்விக்குறியே விடையாக உள்ளது.
துஆ செய்யுங்கள் என்று சொல்வது பரஸ்பரம் ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்படுகிறதோ?என்று எண்ண தோன்றுகிறது?
துஆ என்பது இபாதத்துகளில் ஒன்று என நபி(ஸல்)அவர்கள் அழகான முறையில் சொல்லி இருக்கும் போது நாம் ஏன் தயங்க வேண்டும்?
ஒரு மனிதனின் பரிந்துரையின் மூலம் இன்னொரு மனிதனின் தேவைகளை நாடினால்... இறைவன் நிறைவேற்றி வைக்கிறான்.அந்த பரிந்துரைக்கு பெயர் தான் துஆ.
ஒரு மனிதனின் சிபாரிசின் மூலம் இன்னொரு மனிதனின் நோயை நாடினால்...இறைவன் குணமாக்கி விடுகிறான்.அந்த சிபாரிசுக்கு பெயர் தான் துஆ.
ஒரு மனிதனின் கஷ்டங்களை இன்னொரு மனிதனின் ரெகமெண்ட் மூலம் நாடினால்...இறைவன் இலகுவாக்கி விடுகிறான்.அந்த ரெகமெண்டுக்கு பெயர் தான் துஆ.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபு தர்தா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஒரு முஸ்லிமான மனிதர் தம் சகோதரருக்காக மறைவில் செய்யும் துஆ ஒப்புக் கொள்ளப்பட்டதாகும்.
துஆ செய்யும் அம்மனிதரின் சிரசின் அருகில் ஒரு மலக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பார்.அவர் தம் சகோதரருக்கு நலவானதை கேட்டு துஆ செய்யும் போதெல்லாம் அம்மலக்கு "ஆமீன்"உமக்கும் அதுபோன்ற நலவானது உண்டு என்று கூறுவார்.(நூல்:முஸ்லிம்)
நம்மை போன்ற சராசரி மனிதர்களின் நிலைபாட்டினை தான் மேற்கண்ட ஹதீதுகளின் மூலம் நான் குறிப்பிட்டுள்ளேன்.
ஒரு அடியானின் கோரிக்கையை ஏற்று கொண்டு இன்னொரு அடியானின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்கும் இறைவன்,நமது உயிரினும் மேலான அண்ணல் எங்கள் கோமான் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் பரிந்துரையை ஏற்று சராசரி முஸ்லிமான அடியானுக்கு சுவனத்தையே கொடுக்க காத்திருக்கிறான்.
நாளை மறுமையில் நபி(ஸல்)அவர்களின் ஷஃபாஅத் என்னும் பரிந்துரையின் மூலம் சுவனம் செல்லும் வாய்ப்புக்குரியோராய் நாமும் இருக்க வேண்டாமா?
அதற்கான ஒவ்வொரு நல்அமல்கள் என்னும் கட்டுச்சாதத்தையும் நாம் தயார்படுத்த வேண்டாமா?துஆ என்னும் நல்அமல்களை விரைவுபடுத்துவோம்.
நமக்காகவும் நமது குடும்பத்தாருக்காகவும்,சமுதாயத்துக்காகவும்,உலக முஸ்லிம்களுக்காகவும் எல்லாவிதத்திலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனமுருகி வல்லோனிடம் துஆ கேட்போம்.
"துஆ"அதுவும் ஒரு நல் வணக்கமே.
அன்புடன்
கீழை ஜஹாங்கீர் அரூஸி. |