Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 27
Posted By:Hajas On 10/15/2016 1:15:41 PM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்

Episode 26:  ஜின்கள் உருமாறுதல் பற்றிய மேலதிக விளக்கம்:

Episode 27: மறைவான உலகங்கள் 

சென்ற எபிசோடில், 400 – 800 THz இற்கு இடைப்பட்ட அதிர்வெண்களைக் கொண்ட சக்திச் சொட்டுக்களாக எதுவெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தில் அதிர்ந்து கொண்டிருக்கின்றனவோ, அவற்றை மட்டுமே மனித கண்களால் பார்க்க முடியும்; அதைத் தாண்டிய எதையுமே நம்மால் பார்க்க முடியாது என்பதை ஓரளவுக்கு பார்த்தோம்.

மனித பார்வைக்கு எட்டாத அதிர்வெண்களில் அதிர்ந்து கொண்டிருக்கக் கூடிய இன்னும் பல பரிமாணங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே உலகில், நம்மைச் சுற்றி நமது கண்களுக்குத் தெரியாதவாறு வியாபித்திருக்கின்றன. இவ்வாறான பரிமாணங்களையே நாம் மறைவான உலகங்கள் என்று அழைக்கிறோம். இதை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, ரேடியோ அலைவரிசைகளை உதாரணமாகக் கூறலாம்.

நம்மைச் சூழ இருக்கும் வளிமண்டலத்தில் ரேடியோ / தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதை நாம் அறிவோம். உதாரணத்துக்கு நமது வீட்டு அறையை எடுத்துக் கொண்டால், நமது அறைக்குள் பல்வேறு அதிர்வெண்களிலான ரேடியோ, மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் (FM / AM / UHF / VHF) ஒன்றோடொன்று முட்டிக் கொள்ளாமலும், மோதிக் கொள்ளாமலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிலையில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

இயல்பான நிலையில் இந்த அலைவரிசைகளை நம்மால் உணர முடிவதில்லை. ஆனால், ஒரு வானொலியையோ, அல்லது தொலைக்காட்சியையோ திறந்து, குறிப்பிட்ட ஓர் அலைவரிசைக்குச் சரியாகப் பொருந்தக் கூடிய விதத்தில் அதன் அதிர்வெண்ணைச் சரிசெய்யும் போது (Tune பன்னும் போது) மட்டுமே அந்தக் குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்குச் சொந்தமான அலைவரிசையை நாம் தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது.

அதாவது, மறைவான பரிமாணம் ஒன்றைச் சார்ந்த ஓர் அதிர்வெண்ணோடு, நமது முப்பரிமாண உலகைச் சார்ந்த இந்தக் கருவியின் அதிர்வெண் சரியாக ஒத்துப் போகும் போது தான், குறிப்பிட்ட அந்த மறைவான பரிமாணத்தைச் சார்ந்த அலைவரிசைகளை இவ்வாறான கருவிகளின் துணை கொண்டு நம்மால் உணர முடிகிறது.

இதே அடிப்படையில் தான் பல மறைவான பரிமாண உலகங்கள் நாம் வாழும் இந்த உலகில், நம்மால் பார்க்கவோ, உணரவோ முடியாத விதத்தில் நம்மோடு பின்னிப் பிணைந்த நிலையில் நம்மைச் சுற்றி வியாபித்திருக்கின்றன. இவ்வாறான சில மறைவான பரிமாணங்களில் தான் நாம் வாழும் இதே உலகில் நம்மோடு ஒன்றுக்குள் ஒன்றாக ஜின்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அதிர்வெண்கள் நமது பார்வைப் புலன்களின் எல்லையைத் தாண்டியவை என்பதால், இயல்பான நிலையில் அவர்களை நம்மால் பார்க்க முடிவதில்லை.

அதே நேரம், மனித புலன்களிலிருந்து சற்று மாறுபட்ட புலன்களைக் கொண்ட சில வகையான மிருகங்கள், பறவைகள் போன்ற உயிரினங்களால் இவ்வாறான மறைவான பரிமாணங்களின் சில பகுதிகளைப் பார்க்க முடியும் என்பதை இன்றைய விஞ்ஞானம் ஓரளவுக்கு ஒத்துக் கொண்டுள்ளது. விஞ்ஞானம் ஒத்துக் கொள்கிறதோ இல்லையோ; மார்க்கம் இதைத் தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளது. பின்வரும் ஹதீஸ் மூலம் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்:

ஆதாரம் 1:
அபூஹுரைரா (ரழி) அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சேவல் கூவுவதை நீங்கள் செவியுற்றால், அல்லாஹ்வின் அருளை வேண்டிப் பிரார்த்தியுங்கள். ஏனெனில், அது ஒரு வானவரைப் பார்த்திருக்கிறது (அதனால் தான் கூவுகிறது). மேலும், கழுதைகள் கத்துவதை நீங்கள் செவியுற்றால், ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், அவை ஒரு ஷைத்தானை(கெட்ட ஜின்னை)ப் பார்த்திருக்கின்றன (அதனால் தான் கத்துகின்றன).
(ஸஹீஹ் புகாரி: பாடம் 59, ஹதீஸ் 111)

ஆதாரம் 2:
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: இரவுப் பொழுதுகளில் (அனாவசியமாக) அடிக்கடி வெளியில் செல்வதைத் தவித்துக் கொள்ளுங்கள். சில உயிரினங்களை அல்லாஹ் (இரவுப் பொழுதுகளில் தான்) வெளியில் உலவ விடுகிறான். (இரவில்) நாய் குரைப்பதையோ, கழுதை கத்துவதையோ யாராவது செவியுற்றால், சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ளட்டும். (ஏனெனில்,) உங்களால் பார்க்க முடியாத(மறைவான)வற்றை அவை பார்க்கின்றன.
அதாப் அல் முஃப்ரத்: பாடம் 1, ஹதீஸ் 1233
தரம்: ஸஹீஹ் (அல்பானி)

ஆகவே, மேலுள்ள ஹதீஸ்களின் பிரகாரம், மனித புலன்களுக்கு எட்டாத மறைவான பரிமாண உலகைச் சார்ந்த சில விடயங்களை நாய், கழுதை, சேவல் போன்ற உயிரினங்களால் பார்க்க முடியும் என்பது தெளிவாகிறது.

மனித பார்வைக்குத் தெரியும் விதமாக ஜின்கள் தோன்றுவதன் பொறிமுறை:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரண்டு அடிப்படைகளில் ஜின்கள் நமது முப்பரிமாண உலகுக்குள் மனித கண்களுக்குத் தெரியக் கூடிய வடிவங்களில் பிரவேசிப்பதுண்டு.

1. உருமாறுவதன் மூலம் பிரவேசித்தல்
2. ஓர் ஊடகத்தின் துணை கொண்டு பிரவேசித்தல்

தமது தேவைக்கேற்ப இந்த இரண்டில் ஓரு வழியைத் தெரிவு செய்வதன் மூலமே ஜின்கள் நமது கண்களுக்குத் தெரியக் கூடிய வடிவத்தில் நமது பரிமாணத்துக்குள் பிரவேசிக்கின்றன. சில சமயங்களில் அவர்கள் உருமாறுவதன் மூலம் பிரவேசிக்கும் அதே வேளை, மேலும் சில சந்தர்ப்பங்களில் ஓர் ஊடகத்தின் மூலமும் நமது பரிமாணத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். ஏன் இவ்வாறு இரண்டு வழிகளில் இவர்கள் மாறி மாறி வருகிறார்கள் என்ற கேள்விக்கான விடை இதுவரை எனக்குத் தெரியவில்லை. தமது மாறுபட்ட திட்டங்களுக்கமைய மாறுபட்ட வழிமுறைகளை ஜின்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போதைக்கு இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜின்களின் உள்நோக்கங்கள் குறித்த அனேகமான விடயங்கள் இதுவரை மனிதர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்து வருகின்றன. தந்திரங்கள், சூழ்ச்சிகள் போன்றவற்றில் மனிதர்களாகிய நம்மை விடவும் பல மடங்கு முன்னேறியவர்களே ஜின் இனத்தவர்கள். மனிதர்களை விட மிகவும் பழமை வாய்ந்த இனமாக ஜின்கள் இருப்பதால், நம்மை விடவும் இந்த உலகம் குறித்துப் பல மடங்கு அதிக அனுப அறிவு மிக்கவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். அவர்களது உள்நோக்கங்கள் குறித்துக் கண்டுபிடிப்பது மனிதர்களாகிய நமக்கு உண்மையில் குதிரைக் கொம்பை விடக் கடினமான காரியம்.

இருந்தாலும், ஜின்களின் / ஷைத்தான்களின் தேவைகள், மற்றும் நோக்கங்கள் குறித்து மார்க்கம் கூறும் செய்திகளையும், இன்றைய உலகில் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் நடைமுறை நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு எமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் சிந்தனையை சரியான திசையில் பிரயோகிப்பதன் மூலம் ஜின்கள் நமது பரிமாண உலகுக்குள் பிரவேசிப்பது குறித்த சில உண்மைகளை அனுமானிக்க முடிகிறது. இவ்வாறான சில அனுமானங்களின் அடிப்படையிலேயே பின்வரும் விளக்கங்கள் அமைகின்றன:

ஏற்கனவே நாம் பார்த்த பிரகாரம் ஜின்களின் பரிமாணத்திற்குரிய சக்தி அதிர்வெண்கள், நமது முப்பரிமான உலகின் அதிர்வெண்களை விட அதிகமானவை என்பதை நாம் அறிவோம்.

ஜின்கள் உருமாறும் போது, இயல்பில் தமக்குரிய அதிர்வெண்களிலிருந்து, மனித பரிமாணத்துக்குப் பொருந்தக் கூடிய 400 – 800 THz அதிர்வெண்கள் அளவுக்குள் அடங்கும் விதமாக தமது அதிர்வெண்களைக் குறைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு தமது அதிர்வெண்களை அவர்கள் குறைத்துக் கொள்ளும் போது, அவர்கள் மனித கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறார்கள்.

சுத்தமாகவே மனித கண்களுக்குத் தெரியாத வடிவத்திலிருந்து, மனிதப் புலன்களின் எல்லைக்கு ஓரளவு நெருங்கி வரக்கூடிய அளவுக்குத் தமது அதிர்வெண்களை குறைத்துக் கொள்ளும் போது, நிழல்கள், ஆவி வடிவங்கள் போன்ற அரைகுறைத் தோற்றம் கொண்டவர்களாக ஜின்கள் தோன்றுகிறார்கள். அதே நேரம், நூற்றுக்கு நூறு வீதம் மனிதப் புலன்களுக்குள் அடங்கக் கூடிய அளவுக்குத் தமது அதிர்வெண்களை அவர்கள் குறைத்துக் கொள்ளும் போது, சர்வசாதாரணமாகப் பார்க்கவும், கேட்கவும், தொட்டு உணரவும் கூடிய தோற்றம் கொண்டவர்களாக அவர்கள் மாறுகிறார்கள். ஜின்கள் உருமாறுவதன் தாத்பரியம் நானறிந்தவரை இது தான்.

ஏற்கனவே நாம் பார்த்த பிரகாரம், சக்தி கூடிய பரிமாணங்களிலிருந்து, மனித புலன்களுக்குப் பொருந்தக் கூடியவாறு தமது அதிர்வெண்களை ஜின்கள் குறைத்துக் கொள்ளும் போது, தமது இயல்பான பரிமாண உலகையும், அவை சார்ந்த பல அபார ஆற்றல்களையும் தற்காலிகமாக இழக்க வேண்டிய ஒரு நிலைக்கு ஜின்கள் தள்ளப் படுகின்றன. எனவே தான் மனித வடிவம், அல்லது மிருக வடிவம் போன்ற கண்ணுக்குத் தெரியக் கூடிய வடிவங்களில் இருக்கும் போது ஜின்களால் தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த முடியாது.

உதாரணத்துக்கு ஒரு நாயின் உருவத்தில் வரக் கூடிய ஜின்னுக்கு ஒரு நாய்க்கு என்ன சக்தி இருக்குமோ, கிட்டத்தட்ட அதற்கு ஒப்பான சக்தி தான் இருக்கும். அதே போல், ஒரு பாம்பின் உருவத்தில் உருமாறி வரக்கூடிய ஜின்னுக்கு ஒரு பாம்பினால் என்ன செய்ய முடியுமோ, கிட்டத்தட்ட அதைத் தான் அதன் மூலம் செய்யலாம். அதை மீறிய சக்தி அப்போது அந்த ஜின்னுக்கு இருக்காது.

இவ்வாறு ஜின்களின் ஆற்றல், அவை உருமாறும் போது அந்த உருவத்துக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதனால் தான் ஏற்கனவே நாம் பார்த்த பல சம்பவங்களில் கூறப்பட்டது போல், பல ஸஹாபாக்களாலும் திருட வந்த ஜின்களைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிந்தது.

இந்த இடத்தில் சிலருக்கு இன்னொரு கேள்வி எழலாம். உருமாறும் போது ஜின்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த முடியாது என்றால், எதற்காக அவை வீணாக உருமாறி, அதன் மூலம் தமது ஆற்றலைத் தாமே குறைத்துக் கொள்ள வேண்டும்? பேசாமல் தமது சுய வடிவத்திலேயே வந்து யார் கண்ணுக்கும் தெரியாமல் காரியங்களை சாதித்து விட்டுப் போகலாம் தானே?

கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் இருக்கும் போது அவர்களுக்கு அதிக சக்தியும், வசதியும் இருக்கையில், அதையெல்லாம் துறந்து, கண்ணுக்குத் தெரியும் வடிவத்து அவர்கள் ஏன் அவர்கள் உருமாற வேண்டும்? என்பது நியாயமான கேள்வி தான். இந்தக் கேள்விக்கான திட்டவட்டமான பதில் இது தான் என்று அடித்துக் கூறும் அளவுக்கு நேரடி ஆதாரங்கள் மார்க்கத்தில் கிடையாது. ஆனால், நேரடியான பல மார்க்க ஆதாரங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் மூலம் தர்க்க ரீதியாக சிந்திக்கும் போது, அவற்றின் மூலம் சில மறைமுகமான அர்த்தங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறான மறைமுகமான அர்த்தங்களின் அடிப்படையில் எனது சிந்தனையை ஒட்டி, இது குறித்து நான் சில நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளேன். அதன் அடிப்படையில் இந்தக் கேள்விக்கான பதில் இது தான்:

ஜின்கள் தமக்கே உரிய சுயமான தோற்றத்தில் இருத்தல் என்பதன் அர்த்தம், அவர்கள் தமக்கே உரிய மறைவான பரிமாணத்தில் இருக்கிறார்கள் என்பது தான். பொதுவாகவே, அவர்களது மறைவான பரிமாணத்துக்கும், நமது முப்பரிமான உலகுக்கும் இடையில் சில திரைகளை / தடைகளை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். மார்க்க ஆதாரங்களை சற்று ஆழமாக நோக்கும் போது இந்த உண்மையை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

நமது முப்பரிமான உலகுக்குள் ஜின்களால் தமது சுய வடிவத்திலேயே வரலாம். ஆனால், அவ்வாறு தமக்கே உரிய சுய வடிவத்தில் வந்தால், சொற்ப நேரத்துக்குத் தான் வந்து போகலாம். நீண்ட நேரத்துக்கு அவர்களால் நமது பரிமாணத்துக்குள் தமது சுய வடிவத்தில் தரித்தித்திருக்க முடியாதவாறு ஏதோ ஒருவிதமான தடங்கலை / சிரமத்தை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான் என்பது அவர்களது நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ஆய்வு செய்யும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது, மனிதர்களாகிய நாம் நீருக்கு அடியில் பிரவேசிப்பதைப் போன்ற அடிப்படையிலேயே இதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த விதமான சாதனங்களின் துணையும் இன்றி நீருக்கு அடியில் மனிதர்களாகிய நாம் சஞ்சரிப்பதாக இருந்தால், அவரவர் சக்திக்கு ஏற்றவாறு ஒருசில வினாடிகள் அல்லது நிமிடங்களே நம்மால் நீருக்கு அடியில் தரித்திருக்க முடியும். அதையும் தாண்டி நீருக்கு அடியில் தரித்திருந்தால், அது நமது உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடும்.

நமது சக்திக்கு மீறிய கால அளவுக்கு, அதிக நேரம் நாம் நீருக்கு அடியில் தரித்திருக்க வேண்டுமென்றால், ஆக்ஸிஜன் கருவிகள் போன்ற ஏதாவதோர் ஊடகம் / கருவியின் துணை நமக்கு அவசியம். இவ்வாறான சாதனங்கள் / ஆக்ஸிஜன் உடைகள் போன்றவற்றின் ஊடாக நம்மால் நீண்ட நேரத்துக்கு நீருக்கு அடியில் தரித்திருக்கலாம் என்பதை நாம் அறிவோம்.

இதே அடிப்படையில் தான் ஜின்கள் விவகாரமும் அமைந்திருக்கிறது என்று கூறுவது மிகையாகாது. அதாவது, எந்த விதமான சாதனங்களும் இல்லாத நிலையில், தமது சுய வடிவத்தில் அவர்கள் நமது முப்பரிமாண உலகுக்குள் பிரவேசிப்பது என்பது, நாம் நீருக்கு அடியில் பிரவேசிப்பதைப் போல தான். சுயமான வடிவத்தில் அவர்களால் நமது பரிமாணத்துக்குள் பிரவேசித்துக் காரியம் சாதிக்கலாம்; ஆனால், சாதிக்கும் காரியத்தைக் குறுகிய நேரப் பகுதிக்குள் சாதித்துக் கொண்டு திரும்பி விட வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில், நீண்ட நேரம் நமது பரிமாணத்தில் அவர்கள் தரித்திருக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு இந்த முப்பரிமான உலகம் சார்ந்த ஏதாவதோர் ஊடகம் அவசியப்படுகிறது.

இது குறித்து இன்னும் சில விளக்கங்களை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

 

Episode 28: முப்பரிமாண உலகுக்குள் பிரவேசம் 

 




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..