Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 44
Posted By:Hajas On 2/14/2017 4:09:04 AM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 43 – நரை நிறத்தவர்கள் (தொடர்ச்சி 02): 

Episode 44 – நரை நிறத்தவர்கள் (தொடர்ச்சி 03):

Image may contain: 3 people, text

 நிஜம் 2 – ஃபிலிப் ஷ்னைடர் (Philip Schneider / Phil Schneider):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1990களில் பறக்கும் தட்டுக்கள், வேற்றுக்கிரகவாசிகள், மற்றும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையில் இருக்கும் பல இரகசியத் தொடர்புகள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை உலகுக்கு அம்பலப் படுத்தியவர்களுள் ஃபில் ஷ்னைடர் என்று அழைக்கப்படும் இவரும் குறிப்பிடத்தக்க ஒருவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த இவர் ஒரு பொறியியலாளர். மேலும் பூகோலவியலிலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்க இராணுவத்தின் பல இரகசியச் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் தளங்களாகக் கருதப்படும் “ஏரியா 51” (Area 51), மற்றும் “டல்ஸி இராணுவத்தளம்” (Dulce Base) போன்ற தளங்களில் இவர் பொறியியலாளராகப் பணிபுரிந்தவர்.

குறிப்பாக அமெரிக்க இராணுவத்தின் பல இரகசியச் செயல்திட்டங்களுக்காக நிலத்துக்கு அடியில் பலநூறு அடி ஆழங்களில் வடிவமைக்கப்படும் “ஆழ் நிலக்கீழ் இராணுவத் தளங்கள்” (Deep Underground Military Bases (DUMBs)) எனும் பல கட்டடத் தொகுதிகளை வடிவமைக்கும் பணிகளில் இவர் அதிகம் ஈடுபடுத்தப் பட்டிருந்தார். பொறியியல், மற்றும் புவிவியல் ஆகிய இரண்டிலும் இவருக்கு இருந்த நிபுணத்துவமே இவ்வாறான விஷேட நிலக்கீழ் கட்டடத் தொகுதிகளின் வடிவமைப்புக்குப் பிரத்தியேகமாக இவரை இராணுவம் பணியமர்த்தியதற்குக் காரணம்.

பல இரகசிய செயல்திட்டங்களில் இவர் பணியமர்த்தப் பட்டிருந்ததன் விளைவாக அமெரிக்க இராணுவத்தினுள் வெளியுலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் பல அழுக்கான இரகசியங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவ்வாறான இராணுவ இரகசியங்களுள் ஒன்று தான் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த இரகசியங்கள்.

பிற்காலத்தில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபின், பல்வேறு பிரச்சாரங்கள் வாயிலாக இவர் இவ்வாறான பல இரகசியங்களை மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்தத் தொடங்கினார். நிலக்கீழ் இராணுவத் தளங்களில் பணிபுரிந்த போது, அங்கு பல E.B.E.க்களை (வேற்றுக்கிரகவாசிகளை) நேருக்கு நேர் சர்வசாதாரணமாகத் தான் சந்தித்திருப்பதாகவும் இவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டார். இராணுவ பாஷையில் வேற்றுக்கிரகவாசிகளை “வெளிநில உயிர்த் தனியுருக்கள்” (Extraterrestrial Biological Entities - EBE) என்று தான் அழைப்பர். அந்த அடிப்படையிலேயே இவரும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது EBE என்று அழைப்பதுண்டு.

1995 ஆம் ஆண்டு ஃபில், நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாகப் பல விரிவுரைப் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்தார். இந்த விரிவுரைகளின் போது அமெரிக்க அரசின் இரகசிய இராணுவப் பிரிவுகள் மக்களுக்குச் சொல்லாமல் மூடி மறைக்கும் பல அம்சங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். இதன் மூலம் இவர் குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே உலக பிரசித்தி பெற ஆரம்பித்தார்.

இவரது விரிவுரைகளில் பிரதானமாகப் பறக்கும் தட்டுக்கள், வேற்றுக்கிரகவாசிகள், “கறுப்புச் செயல்திட்டங்கள்” (Black Projects) என்று அழைக்கப்படும் பல அதியுயர் இரகசிய (Top Secret) இராணுவ செயல்திட்டங்கள் போன்ற அம்சங்களே உள்ளடக்கப் பட்டிருந்தன. அமெரிக்க இராணுவத்தின் அழுக்கான பல இரகசியங்கள் இவர் மூலம் வெளியுலகுக்குக் கசியத் தொடங்கியது அமெரிக்க அரசாங்கத்துக்கு ஒரு பெரும் தலையிடியாக மாறத் தொடங்கி விட்டிருந்தது.

இவர் உலக பிரசித்தி பெறுவதற்கு மிக முக்கிய காரணிகளாக அமைந்த அம்சங்களுள் ஒன்று தான், 1979 ஆம் ஆண்டு “டல்ஸி” இராணுவத் தளத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து இவர் பகிரங்கமாக வெளியிட்ட வாக்குமூலம். நரை நிற வேற்றுக்கிரகவாசிகளும், அமெரிக்க இராணுவ வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஒரு மோதல் சம்பவமே இது. இந்தச் சம்பவத்துக்கு இவரே ஒரு நேரடி சாட்சியாக இருந்தது மட்டுமல்லாமல், சம்பவத்தால் பாதிக்கப்பட்டுக் குற்றுயிராக மீட்கப்பட்ட மூவருள் இவரும் ஒருவராக இருந்தார்.

1995ம் ஆண்டு மே மாதம் முதல் இந்தச் சம்பவம் குறித்தும், மேலும் பல இரகசியங்கள் குறித்தும் விவரமான விளக்கங்களோடு ஃபில் ஷ்னைடர் பகிரங்க விரிவுரைகளை நிகழ்த்த ஆரம்பித்தார். இந்த விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு மாதங்களில், அதாவது 1996, ஜனவரி 17ம் திகதி அவரது அப்பார்ட்மெண்ட்டில், மர்மமான முறையில் இறந்து கிடந்த அவரது சடலம் கண்டெடுக்கப் பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது இதுவரை தீர்க்கப்படாத மர்மமாகவே இருக்கிறது.

ஃபிலிப் இறப்பதற்கு முன்னால் நிகழ்த்திய விரிவுரைகளுள் முக்கியமான ஒரு நீண்ட விரிவுரையின் சாராம்சத்தை இங்கு அவர் வாய்மொழியிலேயே வாசகருக்குத் தருகிறேன். சம்பவத்தின் யதார்த்தத் தன்மையை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு, நேரடி வாக்குமூலமாக இதைப் பதிவதே பொருத்தமென்று கருதுகிறேன்.

ஃபில் ஷ்னைடர் விரிவுரையின் சாரம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“இந்த நாட்டில் நிலவும் வெறுக்கத்தக்க அதிகாரக் கட்டமைப்பினைக் கருத்திற்கொண்டு, இங்கு நான் சொல்ல விரும்பும் பல விடயங்களை எக்காரணம் கொண்டும் எவருக்குமே சொல்லாமல் இருந்து விடுவது தான் நமக்கு நல்லதோ? என்று கூட சில சமயங்களில் நானே குழம்பிப் போகும் அளவுக்கு நெருக்கடிகளுக்கு ஆளாவதுண்டு. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தப் பிரச்சாரப் பணியை இதே போல் தொடர்ந்து செய்ய என்னால் முடியுமாகப் போகிறதோ? யார் வேண்டுமானாலும் இதை இலகுவாக அனுமானித்துக் கொள்ளலாம்.

எது எப்படியோ, இந்த விரிவுரை நான்கு பிரதான பகுதிகளாகப் பாகுபடுத்தப்பட்டே நிகழ்த்தப்படும் என்பதை முதலில் கூறிக் கொள்கிறேன். இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் தேசபக்தர்களோ, இல்லையோ, உங்களில் ஒவ்வொரு சாராருக்கும் அவசியமான பல தகவல்கள் இந்த நான்கு பகுதிகளின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளடக்கப் பட்டிருக்கும்.”

“முதலில் உங்களிடம் ஒரு விடயத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். ஐக்கிய அமெரிக்கா எனும் இந்த நாடு, எழில் கொஞ்சும் ஒரு நாடு. எனது வாழ்வில் நான் 70 க்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பிரயாணம் செய்திருக்கிறேன். ஆனால், இந்த நாட்டில் இருப்பதைப் போன்ற அழகையும், வனப்பையும் வேறெந்த நாட்டிலும் நான் கண்டதில்லை.”

“நான் யார் என்பதைச் சுருக்கமாக அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். ஆரம்பக் கல்விக்குப் பிறகு நான் பொறியியல் கல்லூரியிலேயே எனது கல்வியைத் தொடர்ந்தேன். நான் கற்ற மொத்தக் கல்வியிலும் பாதிக்கு மேற்பட்டவை பொறியியல் துறை சார்ந்தவை தாம். ஆனால், பொறியியல் மட்டும் என்றில்லாமல், புவியியல் துறையிலும் எனது கல்வி, மற்றும் ஈடுபாடுகள் ஆகியன ஏககாலத்தில் இருந்ததன் விளைவாக, “புவியியல் பொறியியலாளர்” என்பதாகவே நான் பரவலாக அறியப் பட்டிருக்கிறேன்.”

“மேலும், நான் ஒரு கட்டுமானப் பொறியியலாளராகவும் பல இராணுவ, மற்றும் வான்பரப்பு சார் செயல்திட்டங்களிலும் பணியாற்றியிருக்கிறேன். குறிப்பாக இந்த நாட்டிலிருக்கும் இரண்டு பிரதான இராணுவத் தளங்களின் கட்டுமானப் பணிகளில் எனது பங்களிப்பு பிரதானமானதாக இருந்திருக்கிறது. இந்த இரண்டு இராணுவத் தளங்களுக்கும், இன்றைய உலகுக்கான பாரிய திட்டமாக அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கும் “புதிய உலக ஒழுங்கு” (New World Order) எனும் செயல்திட்டங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்பதை இந்த இடத்தில் கூறிக் கொள்கிறேன்.”

“இந்த இரண்டு இராணுவத் தளங்களுள் முதலாவது தளம் அமைந்துள்ள இடம், நியூ மெக்சிக்கோவில் இருக்கும் “டல்சி” (Dulce). அங்கு 1979 ஆம் ஆண்டு வேற்றுக்கிரகவாசிகளுக்கும்,இராணுவத்துக்கும் இடையில் மூண்ட துப்பக்கிச் சூட்டுச் சண்டையோடு சம்பந்தப் பட்டவர்களுள் நானும் ஒருவன். அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிர்பிழைத்த ஒருசிலருள் நானும் ஒருவன். அதிலும் குறிப்பாக உயிர்பிழைத்தவர்களுள் வாய் திறந்து பேசக்கூடிய ஒரேயொருவராக என்னை மட்டுமே உங்களால் காண முடியும். உயிர்பிழைத்தவர்களுள் இன்னும் இருவர் இன்று வரை கடுங்காவலிலேயே வாழ்ந்து வருகிறார்கள். குறித்த சம்பவம், மற்றும் செயல்திட்டங்கள் குறித்த கோப்புகள் அடங்கலாக அனைத்துத் தகவல்களையும் அறிந்தவனாக (ஓய்வு பெற்ற நிலையில்) இன்று வெளியுலகில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருப்பது நான் மட்டுமே. அறுபத்தாறு இரகசிய சேவை முகவர்கள் (Secret Service agents), FBI முகவர்கள், மற்றும் சில வீரர்கள் அன்றைய தினம் அந்தச் சண்டையில் மொத்தமாகக் கொல்லப்பட்டார்கள். நான் அங்கு தான் இருந்தேன்.”

“முதலாவது விசயம்: நான் இங்கு கூறவிருப்பவற்றில் சில பகுதிகள் உங்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மேலும், இங்கு சொல்லவிருக்கும் இன்னும் சில பகுதிகள் அனேகமாக உங்களால நம்ப முடியாதவையாகவும், உள்ளம் ஏற்க மறுப்பதாகவும் இருக்கும். எனவே, உங்கள் மூக்குக் கண்ணாடிகளை மாட்டிக் கொள்வதற்குப் பதிலாக இப்போது உங்கள் விமர்சனக் கண்ணாடிகளை நீங்கள் மாட்டிக் கொள்வதையே நான் விரும்புகிறேன். ஆனால், தயவு செய்து இது குறித்து உங்களது சொந்த ஆய்வுகளை நீங்கள் மேற்கொண்ட பிறகே இந்தத் தகவல்களை நீங்கள் ஏற்றுக் கொள்வதை நான் வலியுறுத்துகிறேன்.”

“எனக்குத் தெரியும்; இந்த நாட்டின் “தகவல் சுதந்திரச் சட்டம்” (Freedom of Information Act) என்பதை வைத்துக்கொண்டு மட்டும் ஆய்வு செய்வோர் முழுமையான தகவல்களைத் திரட்டிக் கொள்ள முடியாது. இருந்தாலும், இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் வளங்களில் உருப்படியானது இது ஒன்று மட்டும் தான். இது குறித்த சட்டமன்றம் சார்ந்த ஆவணங்கள், மற்றும் ஆதாரங்களைத் தேடித் திரட்டிக் கொள்ள விரும்புவோருக்கு உள்ளூர் நூலகங்கள் ஒரு சிறந்த இடம். மேலும், தன்னளவில் தனிப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஒருவராலேயே இந்த நாட்டில் விழிப்புணர்வுள்ள ஒரு குடிமகனாக வாழ முடியும்.”

ஆழ் நிலக்கீழ் இராணுவத் தளங்களும்,
கறுப்பு வரவுசெலவுத் திட்டமும்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“நான் என் உயிரை நேசிப்பதை விட, நான் வாழும் இந்த நாட்டை அதிகம் நேசிக்கிறேன். இது உண்மையில்லாமல் இருந்திருந்தால், இந்த இடத்தில் நான் எனது உயிரைப் பணயம் வைத்து இந்தத் தகவல்களை முன்வைக்க வந்திருக்கவே மாட்டேன். இந்த விரிவுரையின் முதல் பாகம், நிலத்துக்குக் கீழ் பலநூறு அடிகள் ஆழத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இராணுவத் தளங்கள் பற்றியும், மற்றும் இவற்றுக்காக ஆண்டுதோறும் வரவுசெலவுக் கணக்கின் கணக்குகளுக்குள் வராமல், இரகசியமாக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் நிதி பற்றியும் கவனம் செலுத்துவதாக இருக்கும்.”

“கறுப்பு வரவுசெலவுத் திட்டம் என்பதன் மூலம் இங்கு நான் குறிப்பிடுவது, உத்தியோகபூர்வமான அரச வரவுசெலவுத் திட்டங்களில் கணக்குக் காட்டப் படாமல், ஐக்கிய அமெரிக்காவின் வருடாந்தத் தேசிய வருமானத்திலிருந்து இரகசியமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் 25% நிதித் தொகையைத் தான். தற்போதைய கணக்குகளின்படி, கறுப்பு வரவுசெலவுத் திட்டத்திற்காக மட்டும் வருடாந்தம் ஒதுக்கப்படும் தொகையானது, 1.25 ட்ரில்லியன் (ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் கோடி) அமெரிக்க டாலர்களாகும். ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் இந்த நிதித்தொகை, குறைந்த பட்சம் ஆழ் நிலக்கீழ் இராணுவத் தளங்கள் போன்ற செயல்திட்டங்களுக்காவது தவறாமல் செலவிடப் படுகிறது. இன்றைய திகதிக்கு ஐக்கிய அமெரிக்காவில் 129 ஆழ் நிலக்கீழ் இராணுவத் தளங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் நமது பாதங்களுக்குக் கீழே மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.”

“1940 களிலிருந்து இந்த 129 நிலக்கீழ் இராணுவத் தளங்களையும் ஒவ்வொன்றாக அவர்கள் இரவு பகல் பாராமல், அயராது வடிவமைத்துக் கொண்டே வருகிறார்கள். இவற்றுள் ஒருசில தளங்கள், அதற்கும் முந்திய காலங்களிலிருந்தே கட்டப்பட ஆரம்பித்தன. இங்கு நான் இராணுவத் தளம் என்று குறிப்பிடுவதை வைத்து, ஏதோ ஒரு கட்டடம் என்பது போல் புரிந்து விட வேண்டாம். இவை ஒவ்வொன்றும், உண்மையில் நிலத்துக்கு அடியில் மிகவும் ஆழத்தில் முறையாக வடிவமைக்கப் பட்டிருக்கும் ஒவ்வொரு நகரம் போன்றவை. இந்த நகரங்கள் அனைத்தும் நிலத்துக்கு அடியாலேயே ஒன்றோடொன்று தொடர்பு படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த நிலக்கீழ் நகரங்களுக்கு இடையில் (இராணுவத் தளங்களுக்கு இடையில்) நிலத்துக்கு அடியாலேயே, அதிவேகத்தில் காந்த விசை மூலம் பயணிக்கக் கூடிய “காந்த-கனவீன” (Magneto-levity) அதிவேக ரயில் வண்டிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப் பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அதிவேக ரயில் வண்டிகள் “மாக் 2” (Mach 2) (ஒலியின் வேகத்தின் இரண்டு மடங்கு) வேகத்தில் பயணிக்க வல்லவை.”

“இந்த உண்மைகளை விலாவாரியாக ஆய்வு செய்து, பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுள் என்னிடமிருக்கும் ஒரேயொரு பிரதியாகிய புத்தகம் இப்போது “அல்ஃபிரட் பீலெக்” இடம் இருக்கிறது. கட்டடக்கலையில் Ph.D. பட்டம் பெற்ற “ரிச்சர்ட் சௌடர்” (Richard Souder) என்பவர், இந்த உண்மைகளை நூலுருவில் வெளிக் கொண்டுவருவதற்காகத் தனது உயிரையே பணயம் வைத்தார். பல அரச முகவர்களோடு, ஆழ் நிலக்கீழ் இராணுவத் தளங்கள் பலவற்றில் பணியாற்றிய ஒருவர் இவர். அதுவும் குறிப்பாக “ஐடஹோ”வில் நீங்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பிரதேசங்களையொட்டி மாத்திரம் 11 இராணுவத் தளங்கள் நிலத்துக்குக் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன.”

(குறிப்பு: Richard Souder Ph.D. என்பவர், நிலக்கீழ் தளங்கள் சார்ந்த ஓர் ஆய்வாளர். இவர் எழுதிய பிரசித்தி பெற்ற புத்தகத்தின் பெயர்: “Underground Bases and Tunnels: What is the Government Trying to Hide” என்பதாகும்)

“பொதுவாக இந்த நிலக்கீழ் தளங்களில் அனேகமானவை சராசரியாக நிலத்துக்கு அடியில் ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) ஆழத்தில் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் நிலக்கீழ் நகரங்களாகும். ஒவ்வொரு நகரமும் 4.2 – 6.8 கண கிலோமீட்டர் (cubic Kilometer) கணவளவில் நிர்மாணிக்க பட்டிருக்கும் நகரங்களாகும். அவர்களிடம் லேசர் (Laser) தொழினுட்பத்தில் இயங்கக் கூடிய துளைக்கும் இயந்திரங்கள் (Drilling Machines) இருக்கின்றன. இந்தத் துளை இயந்திரங்கள், ஒரு நாளைக்கு 11 கிலோமீட்டர் தூரம் வரை அனாயாசமாக சுரங்கம் தோண்டும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை.”

“இவ்வாறான கறுப்புச் செயல்திட்டங்கள் மீது இந்த அரசின் காங்கிரஸுக்குக் கூட அதிகாரம் இல்லை. இந்த நாட்டின் அதிகாரக் கட்டமைப்புக்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு ஒரு தனி அரசாங்கமாகவே இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான செயல்திட்டங்கள் சட்டவிரோதமானவை என்பதை நாம் அறிவோம். இன்று “புதிய உலக ஒழுங்கு” (New World Orde) என்பது இந்த இரகசிய இராணுவத் தளங்களிலேயே தங்கியிருக்கிறது. அன்று இந்த நகரங்களை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான், புதிய உலக ஒழுங்கிற்கு உறுதுணையாக இருக்கவே இவை கட்டப்படுகின்றன என்பதை அன்றே அறிந்திருந்தால், இவற்றில் நான் பணிபுரிந்திருக்கவே மாட்டேன். என்னைப் போன்றோரிடமெல்லாம் அன்று பல பொய்யான காரணங்கள் கூறப்பட்டுத் தான் நாம் வேலை வாங்கபட்டோம்.”

இராணுவ தொழினுட்ப விருத்தியும்,
ஜேர்மனியின் ஈடுபாடாக
அறியப்படும் விண்வெளித் தொழினுட்பமும்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“பொதுவாகத் தொழினுட்பங்கள் என்பதைப் பொருத்தவரை, ஒவ்வொரு வருடமும் வெளியுலகத் தொழினுட்பங்கள் வளர்ச்சியடைவதை விடப் பல மடங்கு வேகத்தில் இரகசிய இராணுவத் தொழினுட்பங்கள் விருத்தியடைந்து கொண்டிருக்கின்றன. அதாவது, வெளியுலக நாடுகளின் தொழினுட்பம், ஓராண்டுக்குள் குறிப்பிட்ட அளவு அபிவிருத்தியை அடையும் போது, இராணுவத் தொழினுட்பமோ, அது போன்ற 44.5 ஆண்டுகளுக்கான தொழினுட்ப அபிவிருத்தியை அந்த ஒரே ஆண்டுக்குள் அடைந்து விடுகிறது. இரகசிய இராணுவ தொழினுட்பத்தின் வளர்ச்சி வேகம் இது தான்.”

“இதனால் தான், “வெற்றிடக் குழாய்த் தொழினுட்பம்” (Vacuum Tube Technology) போன்ற தொழினுட்பங்களின் மூலம் 1943ம் ஆண்டு காலப் பகுதிகளிலேயே அவர்களால் ஒரு கப்பலையே ஓரிடத்திலிருந்து மாயமாக மறையச் செய்து, அதே கப்பலை வேறோர் இடத்தில் தோன்றச் செய்ய முடிந்தது.”

“எனது தந்தை ‘Otto Oscar Schneider’ உலக யுத்தத்தின் போது இரு தரப்புக்கள் சார்பாகவும் யுத்தம் செய்த ஒருவர். ஆரம்பத்தில் அவர் ஜேர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் படையில் ஒரு U-boat ரக நீர்மூழ்கிக் கப்பகுக்கு கேப்டனாக இருந்தார். யுத்தத்தின் போது நேச நாடுகளால் சிறைப்பிடிக்கப் பட்டார். அதன் பிறகு ஐக்கிய அமெரிக்காவின் குடிமகனாக அவர் மாற்றப்பட்டு, இந்த தேசத்தின் மீது உண்மையான பக்தி வைக்கும் அளவுக்கு அவர் கொள்கை மாற்றம் செய்யப்பட்டார். பல்வேறு வகைகளைச் சார்ந்த செயல்திட்டங்களிலும் அவருக்கு நெருங்கிய சம்பந்தங்கள் இருந்தன. அணுகுண்டுத் தயாரிப்பு (A-Bomb), ஐதரசன் குண்டுத் தயாரிப்பு (H-Bomb), மற்றும் ஃபிலடெல்ஃபியா பரிசோதனை (Philadelphia Experiment) ஆகியவற்றைப் பிரத்தியேகமாகக் குறிப்பிடலாம்.”

(குறிப்பு: Philadelphia Experiment என்பது, அமெரிக்க கடற்படையின் Destroyer வகுப்பைச் சார்ந்த USS Eldridge / DE-173 எனும் கப்பல், 1943, ஒக்டோபர் 28ம் திகதி, கண் பார்வையிலிருந்து சற்று நேரத்துக்கு முற்றாக மறைந்து போகும் விதமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு இரகசிய தொழினுட்பம் சார்ந்த பரிசோதனை. இந்தத் தொழினுட்பமானது, குவாண்ட்டம் கோட்பாடு, மற்றும் ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் ஆகியவற்றின் தொகுப்பிலிருந்து வடிவமைக்கப் பட்டதாக சொல்லப் பட்டாலும், இன்றைய உலகம் அறிந்திருக்கும் விஞ்ஞானத் தொழினுட்பங்களையும் விட இது பல மடங்கு முன்னேறிய ஒரு தொழினுட்பம் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு பொருள் மீது படும் ஒளிக்கதிர்களை நேர்கோட்டில் பட விடாமல், அந்தப் பொருளைச் சுற்றி வளைந்து செல்லுமாறு திசைதிருப்புவதே இந்தத் தொழினுட்பத்தின் அடிப்படை என்று சொல்லப் படுகிறது. இதன் விளைவாக பார்ப்பவர் கண்களுக்கு அந்தப் பொருள் தெரியாது.)

“எனது தந்தை அன்று கண்டுபிடித்த அதிவேக கமெராவின் மூலம் தான் 1946, ஜூலை 12ம் திகதி பிக்கினி தீவில் (Bikini Island) நடத்தப்பட்ட அனுகுண்டு வெடிப்புப் பரிசோதனை கூட படம் பிடிக்கப் பட்டது. அந்தப் புகைப்படங்களின் அசல் பிரதிகள் இப்போது கூட என் வசம் இருக்கின்றன. மேலும், அன்று பிக்கினி தீவில் நடத்தப் பட்ட அணுகுண்டுப் பரிசோதனையின் போது, அங்கிருந்த பல பறக்கும் தட்டுக்கள், பரிசோதனையின் காரணமாக அங்கிருந்து இடத்தைக் காலி செய்து, அதிவேகத்தில் பறந்து சென்றன. அவ்வாறு பறந்து செல்லும் சில பறக்கும் தட்டுக்கள் கூட இந்தப் புகைப்படங்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன.”

“அன்றைய காலங்களில் பிக்கினி தீவு என்பது, கொசு மொய்ப்பது போல் பறக்கும் தட்டுக்களால் மொய்க்கப்பட்டிருந்த ஒரு தீவுப் பிரதேசமாகும். குறிப்பாக அந்தத் தீவைச் சூழவுல்ல கடலுக்கு அடியில் ஏராளமான பறக்கும் தட்டுக்களின் நடமாட்டங்கள் உண்டு. அந்தத் தீவில் வாழும் பழங்குடி மக்கள் இந்தப் பறக்கும் தட்டுக்குரியோரால் நீண்ட நாட்களாகப் பல இன்னல்களுக்கும், நஷ்டங்களுக்கும் ஆளாகிக் கொண்டே வந்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வேற்றுக்கிரகவாசிகளின் விசித்திரமான சில பரிசோதனைகளின் விளைவாக, தமது வாழ்வாதாரங்களாக அவர்கள் வளர்த்து வரும் பல கால்நடைகள், மற்றும் பண்ணை விலங்குகள் அங்கவீனப் படுத்தப் படுவடுண்டு. இவற்றால் அவர்கள் பெரும் நஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள். அப்போதெல்லாம் “ஜெனரல் மெக் ஆதர்” (General MacArthur), ‘அடுத்த யுத்தம் அனேகமாக இந்த வேற்றுக்கிரவாசிகளோடு தான்’ என்று அடிக்கடி அபிப்பிராயப் பட்டதுண்டு.”

“எது எப்படியோ, இந்த ஃபிலடெல்ஃபியா பரிசோதனை போன்ற மற்றும் பல தொழினுட்ப செயல்திட்டங்களுக்கும் அடித்தளம் இட்ட பல விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவில் எனது தந்தையும் ஓர் அங்கமாக இருந்தார் என்பது தான் உண்மை. எனது தந்தை குறித்த இந்தச் செய்திகளையெல்லாம் இங்கு பிரஸ்தாபிப்பதற்கான காரணம் என்ன? அவர் எனது தந்தை என்பதைத் தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. யுத்த காலங்களில் அவர் எதிரி (ஜேர்மனி) அணியுடன் இருந்த போது இந்த நாட்டுக்கு எதிராக மேற்கொண்ட எந்தச் செயற்பாடுகளிலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அவர் கட்சி மாறி இந்தப் பக்கம் வருவதற்கு அவருக்கு ஒரு தனித்துவமான தைரியம் இருந்திருக்க வேண்டும். மேலும், இதற்காக ஜேர்மனி அவரை உத்தியோகபூர்வமாக வெறுத்தது. மேலும், அவரைக் கொல்பவருக்கு அன்று ஒரு டாலர் தங்கக் காசு பரிசுப் பணமும் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனாலும், அந்த முயற்சிகளில் அவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. போதும்; நமது தலைப்புக்கு (நிலக்கீழ் இராணுவத் தளங்கள்) மீண்டும் வருவோம்.”

இந்த விரிவுரையின் தொடர்ச்சியை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

 

 Episode 45 – நரை நிறத்தவர்கள் (தொடர்ச்சி 04)




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..