Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 50
Posted By:Hajas On 3/18/2017 9:04:21 AM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

 

Episode 49: (Nordic Aliens தொடர்ச்சி 03)

Episode 50: (Nordic Aliens தொடர்ச்சி 04)

Image may contain: 1 person, text

சம்பவம் 3 – Jim Sparks:
~~~~~~~~~~~~~~~~~~~~
இவரும் நீண்ட காலமாக வேற்றுக்கிரகவாசிகளோடு தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் ஒருவர். இவரை அடிக்கடி வந்து சந்திக்கும் வேற்றுக்கிரகவாசிகள், தம்மைப் பற்றிக் கூறிய போது “பாதுகாவலர்கள்” (The Keepers) என்றே தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளதாக சொல்லப் படுகிறது. மேலும், இந்த வேற்றுக்கிரகவாசிகள் மரணத்தை வென்றவர்கள் என்றும், பல்லாயிரம் ஆண்டுகளாக இளமை மாறாமல் சிரஞ்சீவிகளாக இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருபவர்கள் என்றுமே தம்மைப் பற்றி விபரிக்கும் போது கூறியுள்ளதாகவும் குறிப்பிடப் படுகிறது.

இந்தப் “பாதுகாவலர்கள்” மனித வரலாறு பற்றி இவரிடம் பின்வரும் செய்திகளைத் தான் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது:

“மனித இனம் விருத்தியடைந்து இன்றிருக்கும் இந்தக் கட்டத்தை அடைந்திருப்பது இது தான் முதல் தடவையல்ல; இதற்கு முன்பும் மனித வரலாற்றில் இதே போல் காலச் சக்கரம் பல தடவைகள் சுழன்றிருக்கின்றன. அதாவது, ஒவ்வொரு யுகத்தின் போதும் மனித இனம் படிப்படியாக சனத்தொகையிலும், அறிவிலும், நாகரீகத்திலும் முன்னேறி, இறுதியில் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரு நிலையை அடைகிறது.

இந்த நிலையை மனித இனம் அடையும் போது, மனிதர்களது அதிக சனத்தொகையையும், கட்டுக்கோப்பற்ற நடவடிக்கைகளையும் தாங்க முடியாமல் இந்தப் பூமியின் சூழல் சமநிலை குழம்பிப் போய் விடுகிறது. குழம்பிய சமநிலை சரிசெய்யப்பட வேண்டிய தேவை ஏற்படுவதையொட்டி, சில பேரழிவுகள் மூலம் மொத்த மனித நாகரீகமுமே அடியோடு அழிக்கப் படுவது வழக்கம்.

இவ்வாறு எல்லாம் அழிந்து தரைமட்டமான பின், மீண்டும் இந்த மனித இனம் ஆரம்பத்திலிருந்து தனது இனப்பெருக்கத்தைத் தொடங்கும். அறிவு, மற்றும் நாகரீக வளர்ச்சி என்பவற்றை மனித இனம் மீண்டும் படிப்படியாகக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும். இவ்வாறு வளர்ந்து, பழையபடி தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையை மனித இனம் அடையும் போது மறுபடியும் அழிக்கப் படுவார்கள். இப்படியே இது ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கும்.

இந்த அடிப்படையில், மனித இனம் மீண்டும் அடியோடு அழிக்கப் படுவதற்கான கட்டத்தை இந்த நூற்றாண்டில் ஏற்கனவே அடைந்து விட்டது. வெகு சீக்கிரத்திலேயே அழிவு நிச்சயம். ஆனால், இதற்கு முன்பெல்லாம் நடந்தது போலில்லாமல், இம்முறை இந்தப் பேரழிவிலிருந்து மனித இனம் தப்பிப்பதற்குச் சில வாய்ப்புகள் புதிதாக ஏற்பட்டிருக்கின்றன. இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், இம்முறை பேரழிவிலிருந்து மனித இனம் தப்பிக்க முடியும்.

அதாவது, அழிவிலிருந்து தப்பிக்க மனித இனத்துக்கு இருக்கும் ஒரே வழி, மனித இனம் தொடர்ந்தும் இதே போன்ற பலவீனம் மிக்க மனித இனமாக இருக்காமல், உயிரியல் ரீதியாக அடுத்த படித்தரத்துக்குக் கூர்ப்படைவதன் மூலம் புதியதோர் இனமாகப் பரிணமிக்க வேண்டும். இவ்வாறு பரிணமிப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பூமியையும், இதில் வாழும் மனித இனத்தையும் அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.”

இது தான் “ஜிம் ஸ்பார்க்ஸ்” இடம் இந்த வேற்றுக்கிரகவாசிகள் விவரமாகக் கூறிய செய்திகளின் சாராம்சம். மேலும், மனித இனம் புதியதோர் இனமாக கூர்ப்படைந்து பரிணமிப்பதற்குத் தேவையான எல்லா விதமான உதவி, ஒத்தாசைகளையும் செய்யத் தமது வேற்றுக்கிரக இனத்தவர்கள் தயாராக இருப்பதாகவும் இந்த வேற்றுக்கிரகவாசிகள் குறிப்பிட்டதாக ஜிம் கூறுகிறார்.

“மனித இனம் பேரழிவிலிருந்து தப்பித்து, புது இனமாகப் பரிணமிப்பதற்குத் நாம் உதவ வேண்டுமென்றால், அதற்கென்று சில நிபந்தனைகள் உள்ளன. முதல் கட்ட நடவடிக்கையாக மனிதர்கள் நமது “ஐக்கிய கிரகங்கள் சபை” யில் (நமது ஐக்கிய நாடுகள் சபையைப் போல்) அங்கம் வகிப்பதன் மூலம், நமது “சர்வ கிரக” (சர்வதேச என்பது போல்) சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, நாம் அறிவுறுத்தும் அடிப்படைகளிலேயே பூமியில் மனிதர்களது வாழ்க்கை முறை அவசரமாக மாற்றியமைக்கப் பட வேண்டும்” என்றும் இந்த வேற்றுக்கிரகவாசிகள் முதல் நிபந்தனையை முன்வைத்திருப்பதாகவும் ஜிம் குறிப்பிடுகிறார்.

இவை குறித்து மேலதிக தேடல்களை மேற்கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்புகள் வாயிலாகத் தமது ஆய்வுகளை ஆரம்பிக்கலாம்:
http://www4.jim-sparks.com/
http://www.coasttocoastam.com/guest/sparks-jim/6844

இதுவரை சொல்லப்பட்ட சம்பவங்களையும், இந்த Nordic இனத்தவர்களது நடவடிக்கைகளையும் பார்க்கும் போது வாசகருக்குப் பல உண்மைகள் ஏற்கனவே புலப்பட ஆரம்பித்திருக்கும். ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக வழிகெடுத்து, நாசமாக்கிக் குட்டிச்சுவராக்கி நரகில் தள்ளுவதை விட, இலகுவாகக் கோடிக்கணக்கான மனிதர்களை ஏக காலத்தில் கொத்தாக அழித்து நாசமாக்கவும், நரகில் தள்ளவுமே இவர்களது வியூகங்கள் வகுக்கப் படுகின்றன என்பது சிந்திப்போருக்குப் புரிய ஆரம்பித்திருக்கும்.

இதுவரை நாம் பார்த்தது Nordic இனத்தவர்களது நாடகங்களின் ஒரு பக்கம். இனி இதே இனத்தவர்களது செயல்திட்டங்களின் அசிங்கம் பிடித்த இன்னொரு பக்கத்தையும் அறிந்து கொள்ளும் விதமாக இன்னும் ஓரிரு சம்பவங்களையும் சற்று நோக்கலாம். இப்போது நோக்கவிருக்கும் சம்பவங்கள், இதுவரை சொல்லப்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலானவை அல்ல; சற்று வித்தியாசமானவை. ஆய்வின் அவசியம் குறித்தே இவையும் உள்ளடக்கப் படுகின்றன:

சம்பவம் 4 – “அண்ட்டோனியோ விலாஸ்” (Antônio Vilas-Boas):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அண்ட்டோனியோ விலாஸ் என்பவர் ப்ரேஸில் நாட்டைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் விவசாயத்தை சொந்தத் தொழிலாகக் கொண்டிருந்த இவர், பிற்காலத்தில் ஒரு வழக்கறிஞராக மாறியவர். வேற்றுக்கிரகவாசிகளால் இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் 1957 ம் ஆண்டு நடந்தது.

இவரது சம்பவத்தைப் பொருத்தவரை, பல சாட்சிகள் பக்கத்தில் இல்லாத நிலையில் தனிமையில் நடந்த ஒரு சம்பவம் இது. சம்பவத்தின் சாட்சியாக இவர் மட்டுமே இருந்தார். இதை ஒரு சாதகமாக உபயோகித்து, பல “விமர்சகர்”களும் இவரது சம்பவத்தைக் கட்டுக்கதையென்று கூறிப் பொய்ப்பிக்க முயன்றதுண்டு. ஆனால், கடைசிவரை தனது நிலைபாட்டைச் சற்றும் மாற்றிக் கொள்ளாமல் தான் கூறிய கூற்றுக்களிலிருந்து அணுவளவும் பின்வாங்காமல், நடந்த சம்பவம் மொத்தமும் உண்மையென்று கடைசிவரை வாதிட்டவர் இவர்.

இவரது சம்பவத்துக்கு இருந்த ஒரே பின்னடைவு, போதிய நேரடி சாட்சிகளோ, நேரடி ஆதாரங்களோ இவர் கைவசம் இல்லாத ஒரு நிலையில் இந்தச் சம்பவம் நடந்தது தான். எனவே, இந்தச் சம்பவத்தை ஓர் அதாரமாக எடுத்துக் கொள்வதற்கு அனேகமான ஆய்வாளர்கள் தயங்கியதுண்டு. ஆனால், இதே போன்ற வேறு பல சம்பவங்கள் பிற்காலத்தில் உலகின் பல பாகங்களிலும் மறுக்க முடியாத ஆதாரங்கள் சகிதம் நடக்கத் தொடங்கிய பிறகு, இவரது சம்பவம் ஒரு கட்டுக்கதையல்ல; உண்மைச் சம்பவமே என்பதை அனேகமான ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

சம்பவம்:
~~~~~~~~
அப்போது அண்ட்டோனியோவுக்கு 23 வயது. தனது சொந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்யும் ஒருவராகவே இவர் அப்போது இருந்தார். பகல் நேரங்களில் வெப்பம் தாங்க முடியாததால் இவர் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே தனது வயலில் வேலை செய்வது இவரது வழக்கம்.

1957, ஒக்டோபர் மாதம் 16ம் திகதி இரவு, ட்ராக்டரில் தனது வயலை உழுது கொண்டிருந்த போது, இருண்ட வானத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியதைக் கண்ட அண்ட்டோனியோ, வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். நட்சத்திரம் மெல்லத் தன்னை நோக்கி நெருங்கி வருவதையும், நெருங்க நெருங்க அது பெரிதாகிக் கொண்டே வந்ததையும் அண்ட்டோனியோ பார்த்துக் கொண்டேயிருந்தார். இறுதியில் மிகவும் பக்கத்தில் வந்த பிறகு, அது ஒரு நட்சத்திரமல்ல; கிட்டத்தட்ட ஒரு முட்டையின் வடிவத்திலான ஒரு பறக்கும் ஊர்தி என்பது புரிந்தது.

ஊர்தியின் முன் பக்கத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு வெளிச்சத்தையும், மேல் பக்கமாக ஏதோ ஒரு கட்டமைப்பு தொடர்ச்சியாகச் சுழன்று கொண்டிருந்ததையும் அண்ட்டோனியோவால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இறுதியில் ஊர்தி மெதுவாகத் தனது வயலில் தரையிறங்குவதையும், அதிலிருந்து மூன்று கால்கள் தரை நோக்கி நீளுவதையும் கண்டவுடன், அங்கிருந்து உடனே ஓடி விடுவதே நல்லதென்று அண்ட்டோனியோவுக்குத் தோன்றியது. உடனே தந்து ட்ராக்டரைத் திருப்பி அங்கிருந்து வேகமாக ஓட்டலானார். சிறிது தூரம் செல்வதற்குள் ட்ராக்டர் திடீரென்று சுத்தமாகச் செயலிழந்து விட்டது. ஏன், எதற்கென்று காரண காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்க நேரம் இருக்காததால், ட்ராக்டரை அங்கேயே போட்டு விட்டு, இறங்கி ஓடலானார்.

கொஞ்ச தூரம் ஓடுவதற்குள் அண்ட்டோனியோ தடுத்து நிறுத்தப் பட்டார். கிட்டத்தட்ட ஐந்து அடி உயரம் அளவுடைய ஒரு வேற்றுக்கிரகவாசி அண்ட்டோனியோவை ஓட விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. சாம்பல் நிற மேலாடையால் உடலும், தலைக்கவசம் போன்ற ஒன்றினால் தலையும் மூடப்பட்டிருந்த இந்த வேற்றுக்கிரகவாசி, கிட்டத்தட்ட மனித உருவத்துக்கு நெருக்கமான உருவத்திலேயே இருந்தது. அதன் கண்கள் சிறியவையாகவும், நீல நிறத்திலும் இருந்தன.

அந்த வேற்றுக்கிரகவாசியிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓடுவதற்கு அண்ட்டோனியோ போராடிக் கொண்டிருந்த போது, அதே போன்ற மேலும் மூன்று வேற்றுக்கிரக வாசிகள் துணைக்கு வந்து, அண்ட்டோனியோவைத் தமது பறக்கும் தட்டுக்குள் இழுத்துச் சென்றனர். அவர்கள் பேசும் போது, மனிதர்கள் பேசுவது போல் பேச்சு இருக்கவில்லை. மாறாக, நாய் குரைப்பது போலவும், ஊளையிடுவது போலவுமே அவர்களிடமிருந்து விசித்திரமான சப்தங்கள் வெளிப்பட்டன என்றே அண்ட்டோனியோ குறிப்பிட்டார்.

பறக்கும் தட்டினுள் இழுத்துச் செல்லப்பட்ட அண்ட்டோனியோவின் ஆடைகளெல்லாம் களையப் பட்டு, முழு நிர்வாணமாக்கப் பட்டார். அதன் பிறகு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலை மூடும் விதமாக ஒரு விதமான ஊன்பசை (Gel) அவரது உடல் முழுவதும் தடவப்பட்டது.

பிறகு, அரைவட்ட வடிவிலான இன்னோர் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். இந்த அறையின் வாசலில் சில விசித்திரமான குறியீடுகள் சிவப்பு நிறத்தில் பொறிக்கப் பட்டிருந்ததை அண்ட்டோனியோ அவதானித்தார். (இந்தக் குறியீடுகளை அண்ட்டோனியோ பிற்காலத்தில் விசாரணை செய்தோரிடம் வரைந்தும் காட்டினார்.)

இந்த அறையில், வேற்றுக்கிரகவாசிகள் அண்ட்டோனியோவின் தாடையின் அடிப்பகுதியிலிருந்து கொஞ்சம் இரத்தத்தை ஒரு கருவி மூலம் உறிஞ்சி எடுத்து சேகரித்துக் கொண்டனர். இதன் பிறகு அவரை இன்னோர் அறைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரைத் தனியாக விட்டுச் சென்று விட்டனர். கிட்டத்தட்ட அரைமணி நேரமாக யாரும் வரவில்லை. தனியாகவே அந்த அறைக்குள் விடப்பட்டிருந்தார். இதன் போது அறைக்குள் ஒரு வகையான வாயு செலுத்தப்பட்டு, அது முழு அறையிலும் நிறைந்து விட்டது. அதைச் சுவாசித்த அண்ட்டோனியோ, தான் நோய்வாய்ப்பட்டதைப் போல் உணரத் தொடங்கினார்.

சிறிது நேரத்தின் பின்னர் இன்னொரு வேற்றுக்கிரகவாசி அறைக்குள் வருகை தந்ததாகவும், இந்த வேற்றுக்கிரகவாசியும் ஏறத்தாழ மனித உருவத்திலேயே இருந்ததாகவும் அண்ட்டோனியோ குறிப்பிட்டார். ஆனால், ஏற்கனவே சந்தித்தவர்களைப் போல் இந்த வேற்றுக்கிரகவாசி இருக்கவில்லை. மாறாக, மிகவும் அழகான ஒரு பெண்ணின் வடிவத்திலேயே இந்த வேற்றுக்கிரகவாசி இருந்தது. மேலும் இந்தப் பெண்ணின் உடலில் எந்த ஆடைகளும் இல்லாமல், முழு நிர்வாணமாகவே வந்திருந்தாள்.

ஏற்கனவே அண்ட்டோனியோ சந்தித்த ஏனைய வேற்றுக்கிரகவாசிகளின் அதே உயரத்திலேயே இந்தப் பெண்ணும் இருந்தது மட்டுமல்லாமல், ஓரளவு கூரான சிறிய தாடையையும், பூனையின் கண்களைப் போன்ற அகண்ட கண்களையும் கொண்டிருந்த இந்தப் பெண்ணின் அழகான உருவம் அண்ட்டோனியோவின் மனதை ஈர்ப்பதாகவே இருந்தது. இடுப்பளவுக்கு நீளமான இந்த வேற்றுக்கிரகவாசியின் தலைமுடி, ஓரளவு மிளிறும் வெள்ளை நிறத்திலிருந்த போதும், அக்குள் மற்றும் மர்ம உறுப்பின் முடிகளோ ஒளிரும் சிவப்பு நிறத்திலேயே இருந்தன.

வைத்த கண் வாங்காமல் இந்த வேற்றுக்கிரகக் கன்னியையே பார்த்துக் கொண்டிருந்த அண்ட்டோனியோவின் உள்ளம் தன்னையறியாமலேயே அவள் அழகில் ஈர்க்கப்பட்டு, ஏற்கனவே தன் கட்டுப்பாட்டை இழந்து போயிருந்தது. பக்கத்தில் நெருங்கி வந்த இந்த வேற்றுக்கிரகக் கன்னி அண்ட்டோனியோவை உடலுறவுக்கு அழைத்ததும், அடுத்த கணமே தன்னை மறந்து அவளோடு உடலுறவில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். இதன் போது வழமையாக மனிதப் பெண்கள் நடந்து கொள்வது போலில்லாமல், அடிக்கடி அண்ட்டோனியோவின் தாடைப் பகுதியைக் கடிப்பது போல் இந்த வேற்றுக்கிரகவாசி ஏதோ செய்து கொண்டிருந்ததாக அண்ட்டோனியோ குறிப்பிட்டார்.

எல்லாம் முடிந்த பிறகு, இந்த வேற்றுக்கிரகவாசி அண்ட்டோனியோவைப் பார்த்துப் புன்னகைத்தவாறு தனது வயிற்றைத் தடவிக் காட்டி, கையை மேல் நோக்கி உயர்த்திக் காட்டி சைகை செய்ததாக அண்ட்டோனியோ குறிப்பிட்டார். அண்ட்டோனியோவால் இந்தச் சைகையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனது வயிற்றில் வளரும் அண்ட்டோனியோவின் குழந்தையை மேலே விண்வெளியில் இருக்கும் தமது கிரகத்தில் வளர்க்கப் போவதாகவே இந்த வேற்றுக்கிரகக் கன்னி சைகை மூலம் குறிப்பிட்டதாக அண்ட்டோனியோ விளக்கம் கூறினார்.

இதன் பிறகு, தனது கடமை முடிந்து விட்டது என்பது போன்ற பாவனையோடு அந்த வேற்றுக்கிரகவாசி அங்கிருந்து அகன்று சென்று விட்ட பிறகே, கலப்பினம் உருவாக்குவதற்குக் காளைகள் உபயோகிக்கப் படுவது போல் தான் வெறும் கருவியாக மட்டுமே உபயோகிக்கப் பட்டதை உணர்ந்து கொண்டதும் அண்ட்டோனியோவுக்குக் கடும் கோபம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதன் பிறகு அண்ட்டோனியோவின் ஆடைகள் திரும்ப அவரிடம் ஒப்படைக்கப் பட்டன. ஆடைகளை உடுத்திக் கொண்டதன் பின்னர், பறக்கும் தட்டினுள் ஓரிரு இடங்களுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இதன் போது, அங்கு ஓரிடத்திலிருந்த சிறிய கடிகாரம் போன்ற ஒரு பொருளை சம்பவத்தின் ஆதாரமாக அடுத்தவர்களுக்குக் காட்டும் நோக்கத்தில் அண்ட்டோனியோ திருடி மறைத்து வைத்துக் கொண்டதாகவும், ஆனால் அதை அடுத்த கணமே அவர்கள் கண்டு பிடித்து, அவரிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டதாகவும் அண்ட்டோனியோ மேலும் குறிப்பிட்டார்.

இறுதியாக அண்ட்டோனியோவை அவர்கள் வெளியே அழைத்து வந்து விட்டு விட்டு, பறக்கும் தட்டில் ஏறிப் பறந்து சென்றதாகவும், மிகவும் பிரகாசமான வெளிச்சத்தோடு அது மேலெழும்பிப் பறந்து சென்றதைத் தான் பார்த்துக் கொண்டே இருந்ததாகவும் அண்ட்டோனியோ குறிப்பிட்டார். வீட்டுக்கு வந்து நேரத்தைப் பார்த்த போது, கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் கழித்தே தான் திரும்ப வந்திருப்பதை அண்ட்டோனியோ புரிந்து கொண்டார்.

பிற்காலத்தில் அண்ட்டோனியோ விவசாயத்தைக் கைவிட்டு விட்டு வழக்கறிஞராக மாறினார். மேலும் இவர் திருமணம் முடித்து நான்கு பிள்ளைகளுக்கும் தகப்பனாக இருந்தார். இவரது ஆயுட்காலம் முழுவதும் இந்தச் சம்பவத்தை அச்சுப் பிசகாமல், யார் கேட்டாலும் அதே மாதிரி சொல்பவராகவே கடைசிவரை இருந்து வந்தார். 1991, ஜனவரி 17ம் திகதி இவர் மரணித்தார்.

சம்பவத்தின் பின்விளைவு:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தச் சம்பவத்தின் விளைவாக அண்ட்டோனியோவின் உடல்நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. தொடர்ச்சியான குமட்டல், தலைவலி மற்றும் உடல் பலவீனம் ஆகியன ஆரம்ப அறிகுறிகளாக வெளிக்காட்டத் தொடங்கின. அத்தோடு உடல் முழுவதும் தோலில் கடுமையான அரிப்பும், அதைத் தொடர்ந்து குஷ்டம் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாயின. உடல் முழுவதும் வெளிறிய நிறங்களில் பொட்டுக்கள் போல் அடையாளங்களும் தோன்ற ஆரம்பித்தன.

எந்த மருத்துவத்துக்கும் குணமாகாமல் நோய் நீடித்துக் கொண்டேயிருந்ததால், பறக்கும் தட்டுக்கள் குறித்த முன்னனுபவமுடைய யாரிடமாவது இது குறித்து அலோசணை பெறுவதே சிறந்ததென்று அண்ட்டோனியோவுக்குத் தோன்றியது. எனவே, அதற்குரிய நடவடிக்கையில் இறங்கலானார். பத்திரிகையாளர் Jose Martins என்பவரைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரிக்க, அவர் பத்திரிகையில் ஒரு சிறிய விளம்பரத்தைப் பிரசுரித்தார். அதாவது, பறக்கும் தட்டுக்கள் / வேற்றுக்கிரகவாசிகள் குறித்த முன்னனுபவமுள்ள யாராவது இருந்தால், விளம்பரதாரரை அவசரமாகத் தொடர்பு கொள்ளுமாறு விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்டது.

மேலும், பத்திரிகையாளர் மார்டின்ஸ், ப்ரேஸில் தேசிய மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் Dr. Olavo Fontes என்பவரைத் தொடர்பு கொண்டு, அண்ட்டோனியோவின் சம்பவத்தை அவருக்கும் எத்தி வைத்தார். ஏனெனில், Dr. Olavo Fontes என்பவருக்கு ஏற்கனவே APRO எனும் அமெரிக்க பறக்கும்தட்டு ஆய்வுக் குழுவோடு தொடர்புகள் இருந்து வந்ததால், இது குறித்து அவர் உதவலாம் எனும் எதிர்பார்ப்பிலேயே அவர் தொடர்பு கொள்ளப்பட்டார். Dr. Olavo Fontes அண்ட்டோனியோவைப் பிரத்தியேகமாகப் பரிசோதித்துப் பார்த்த பிறகு, பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிந்தார். கதிர்வீச்சுத் தாக்குதல்களுக்கு அண்ட்டோனியோவின் உடல் உள்ளாகி இருப்பது தெரிய வந்தது. இதன் விளைவாக அண்ட்டோனியோ தற்போது mild radiation sickness எனும் கதிர்வீச்சு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக Dr. Olavo Fontes கூறினார்.

இது குறித்து எழுத்தாளர் Terry Melanson விபரிக்கையில், பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

அண்ட்டோனியோவுக்கு ஏற்பனட்ட நோய் அறிகுறிகளில், உடல் முழுவதும் இனம்புரியாத வலி, குமட்டல் / வாந்தி, தொடர்ச்சியான தலைவலி, பசியின்மை, தொடர்ச்சியாக இரண்டு கண்களும் எரிவது போன்ற உணர்வு, பல மாதங்களாகக் குஷ்டரோகம் போன்ற விசித்திரமான தோல் வியாதிகள், மற்றும் தேகமெல்லாம் சிவப்பு நிறத்திலான கட்டிகள் போன்றவை குறிப்பிடத் தக்கவையாக இருந்தன. இந்தக் கட்டிகளைத் தொடும் போது கூட கடும் வலியை அண்ட்டோனியோ அனுபவித்தார். மேலும், ஒவ்வொரு கட்டியின் நடுவிலும் சிறிய பொட்டு போன்ற ஓர் அடையாளம் இருக்கும். அதனூடாக மஞ்சள் நிறத்தில் சலத்தையொத்த, ஆனால் அதை விடவும் நீர்த்தன்மையான ஒருவகையான திரவம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். மேலும், உடலிலிருக்கும் புண்களைச் சுற்றிவரத் தொட முடியாத அளவுக்கு வேதனை இருக்கும்.

இந்தச் சம்பவம் 1957 ஆம் ஆண்டு நடந்த போதும், உடனே அது பிரசித்தி பெறவில்லை. 1958 ஆம் ஆண்டளவிலேயே சம்பவம் பிரசித்தி பெற ஆரம்பித்தது. பிறகு 1963 பகுதிகளில் சம்பவம் சில பத்திரிகைகளில் பிரசுரமாகத் தொடங்கியதையடுத்தே இது உலகின் கவனத்தை ஈர்த்தது.

பொதுவாக நரைநிறத்தவர்கள் கடத்தும் போது கடத்தப்படும் மனிதர்களின் ஞாபகங்களில் சம்பவம் குறித்த பகுதிகளை அழிப்பது போல் அண்ட்டோனியோவின் சம்பவத்தில் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில், எந்தவிதமான சிரமங்களும் இல்லாமல், அறிதுயில் போன்ற உளவியல் உத்திகளின் தேவைகள் கூட இல்லாமல் மொத்த சம்பவத்தையும் ஆரம்பம் முதலே எந்தக் குழப்பமும் இல்லாமல் அண்ட்டோனியோவால் இலகுவாக விபரிக்க முடிந்தது. இதே தெளிவுடனேயே அவர் மரணம் வரை இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக தேடல்களை மேற்கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்பிலிருந்து ஆரம்பிக்கலாம்:
https://en.wikipedia.org/wiki/Antônio_Vilas_Boas

அண்ட்டோனியோவின் சம்பவத்தைப் பொருத்தவரை, சம்பவம் உண்மையானதாக இருந்த போதும், மறுக்க முடியாதவாறு அதை நிரூபிக்கும் அளவுக்குப் போதிய ஆதாரங்கள் இந்தச் சம்பவத்துக்கு இருக்கவில்லை. அண்ட்டோனியோவின் நம்பகத் தன்மையும், அவரது வாக்குமூலமும், ஒருசில நோய் அறிகுறிகளும் மட்டுமே இந்தச் சம்பவத்தின் ஆதாரங்கள். எனவே இந்தச் சம்பவம் அனேகமான எதிர்த்தரப்பு வாதிகளின் விமர்சனங்களுக்கு உள்ளானதுண்டு.

ஆனால், இந்தச் சம்பவம் உண்மையென்பதைப் புரிந்து கொள்வதற்கு வசதியாக இது போன்ற மேலும் பல சம்பவங்கள் பிற்காலத்தில் நிகழ்ந்தன. அவற்றில் ஒருசில சம்பவங்கள் அசைக்க முடியாத ஆதாரங்களோடு பதிவாகியிருக்கின்றன. அவ்வாறான சம்பவங்களுள் ஒரு சம்பவத்தை மட்டும் நாம் அடுத்த எபிசோடில் சற்று விரிவாக நோக்குவதன் மூலம் Nordic இனத்தவர்கள் பற்றி இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 51: (Nordic Aliens தொடர்ச்சி 05)




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..