Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல்
Posted By:peer On 5/23/2017 1:26:28 PM

‘நீட்’ எனும் தேசிய அளவிலான மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7 அன்று நடைபெற்றது. சி.பி.எஸ்.இ என அழைக்கப்படும் மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் இத்தேர்வை நடத்தியது. நாடு முழுவதும் 11,38,890 மாணவர்கள், 103 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1900 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காளி, அஸ்ஸாமி, குஜராத்தி, கன்னடா, ஒரியா ஆகிய பத்து மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 85,000 மாணவர்கள் இத்தேர்வை எழுதுவதற்காக பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த அவரவர்களுக்கான தேர்வு மையங்களை நோக்கி விரைந்தனர்.

மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் வந்திருந்தனர். அவர்களுக்கு அங்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால், சோதனை என்ற பெயரில் மிகக் கேவலமாக நடந்து கொண்டுள்ளனர் ஆசிரியப் பெருமக்கள்.

மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு மாணவர்களை உள்ளாக்கியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணனூரில் ஒரு மாணவியைச் சோதனையிட்டபோது, பீப் ஒலி எழுந்தது. அந்த மாணவி அணிந்திருந்த உள்ளாடையில் மெட்டல் ஊக்கு இருந்ததே இதற்குக் காரணம். எனவே அந்த மாணவி தனது உள்ளாடைகளைக் களைந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவாள் என அதிகாரிகள் தெரிவித்தனர். பலர் முன்னிலையில் உள்ளாடையைக் களைந்து, வெளியே நின்றிருந்த தம் பெற்றோரிடம் கொடுத்துவிட்ட பிறகே தேர்வெழுதச் சென்றுள்ளாள்.

இன்னொரு பெண் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்டில் இருந்த பட்டன் காரணமாக பீப் ஒலித்தது. ஜீன்ஸ் பட்டன் அபாயகரமான பொருள் எனக் கூறி அவள் வெளியே அனுப்பப்பட்டாள். தேர்வு மையத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் இருந்த கடைக்குச் சென்று அவளுடைய தந்தை வேறு உடை வாங்கி வந்து அணிந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டாள்.

தமிழகத்தில் முழுக்கை சட்டை அணிந்த மாணவர்களின், முழுக்கை சுடிதார் தரித்த மாணவிகளின் உடைகள் கத்தரிக்கோல் கொண்டு வெட்டப்பட்ட பிறகே உள்ளே அனுமதித்துள்ளனர். கம்மல், வளையல்கள்கூட கழட்டப்பட்டுள்ளன. தலையில், காதுகளில் எல்லாம் டார்ச் அடித்துச் சோதித்துள்ளனர். இந்தச் சோதனைகள் காரணமாக கடும் மனஉளைச்சலுடன், ஒருவிதப் பதட்டத்துடனே மாணவ, மாணவியல் தேர்வெழுதியுள்ளனர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்கு உரியவை. மிக இழிவானவை. மனிதஉரிமை மீறல் ஆகும். கேரள அரசு அத்துமீறலில் ஈடுபட்ட நான்கு ஆசிரியர்களை இடைநீக்கம் செய்துள்ளது. தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்றுள்ளது.

தமிழகத்திலும், கேரளாவிலும் கடுமையான முறையில் சோதனை செய்யப்பட்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாநிலங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை. மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்தும், சீக்கியர்கள் டர்பன் அணிந்தும் தேர்வு எழுதிய காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஏன் இந்தப் பாரபட்சம்? அதிகாரிகள் சிலரது அதீத ஆர்வக்கோளாறுதான் இதற்குக் காரணம் என சிபிஎஸ்இ செய்தித் தொடர்பாளர் இராம ஷர்மா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டும் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் வேறு. +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட முறையை ரத்து செய்துவிட்டு, தேசியத் தகுதித் தேர்வை மத்திய அரசு வலுக்கட்டாயமாகத் திணித்துள்ளது. இது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என்ற கருத்தும் கவலையும் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. +2 வரை மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள், சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் அமைந்த நீட் தேர்வை ஒரு மாத இடைவெளியில் எப்படி எழுத முடியும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

இந்நிலையில், தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள நீட் தேர்வில், அவர்கள் மீது உளவியல் தாக்குதலும் தொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது குறித்து தமிழக அரசு வாய் திறக்காமல் இருப்பது கவலைக்குரியது. நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இன்று வரை குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு வந்து சேரவில்லை என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அதனைச் சட்டமாக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், தமிழர்கள் மீதான அவமானங்களும், அடக்குமுறைகளும் தொடரவே செய்யும்.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..