Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நோன்பு - கவிக்கோ அப்துல் ரகுமான்
Posted By:peer On 6/3/2017 2:28:53 AM

அருளின் தேவதை

ஆண்டுக்கொருமுறை

கால வீதியில்

காலெடுத்து வைக்கின்றாள் -

சாந்தியின் தூதாக !

 

அவள்தான் ரமழான் ! 

அவள் புன்னகையில் 

ஆயிரம்  பூர்ணிமைகள் !

கண்களிலே 

கருணைச் சுடர்கள் !

 

அவள் 

நான்கு வேதங்களை

ஈன்றளித்த

புனிதத்தாய் !

பாவக் கறைகளை

அவள்

பரிவோடு துடைக்கின்றாள் !

நரகக் கூண்டுகளில்

அடைபட்ட பறவைகளை 

விடுதலை செய்கின்றாள் !

பிறைச் சுடர் கொண்டு

அக அகல்களில் எல்லாம் 

ஆன்மீக வெளிச்சம்

ஏற்றி வைக்கின்றாள் !

பசியென்ற அமுதம்

பரிமாறிப் பூமியையே 

சொர்க்கமாய் ஆக்குகிறாள் !

 

பணத்தைப் பகிர்ந்து கொள்ள

ஏழைவரி !

பசியைப் பகிர்ந்து கொள்ள

உண்ணா நோன்பு !

 

எதுவுமே தேவையற்ற

இறைவன்

நோன்பை  மட்டும்

தனக்கென்று கேட்கின்றான் !

தருவதற்கு

கொடுத்து வைக்க வேண்டாமா ?

 

அடடா !

எத்தகைய  பெருமை !

இறைவனே நம்முன்

இரக்கின்ற ஏழை !

கொடை வள்ளல்

நாமெல்லாம் !

வேலைக்கே கூலியுண்டு !

ஓய்வுக்கு யார் தருவார் ?

ஆனால்-

வயிற்றின் இந்த ஓய்வுக்கு 

வல்லோன் இறைவன்

தன்னையே சம்பளமாய்த்

தந்து விடுகின்றான் !

உபவாசம் இருப்போரின்

வாய் வாசம் இறைவனுக்கு

கஸ்தூரி வாசம் !

இதுதான் அவன்

ஆலயத்தின்

நறுமணத் தூபம் !

 

இல்லாமல் பசிக்கின்ற

ஏழையரின் துயருணர 

இருப்பவனைப் 

பசிக்க வைக்கும்

இணையற்ற 

தத்துவமே நோன்பு !

அங்க ரதத்தை 

அங்கிங்கே அலைகழிக்கும்

ஐந்து குதிரைகளை

அடக்கும் கடிவாளமிது !

மனிதன்

ஆசைகளின் எடுபிடியாய்

ஆடாமல் அவைகளைத்

தன்

எவலராய் மாற்றும்

அதிகார வலிமையிது !

உதிர வீதிகளில்

உலா வரும் சாத்தானும்

சிந்தை நடுங்கும்

சிகப்பு விளக்கு இது !

சொர்க்க வாசல்களைத்

திறக்கின்ற சாவியிது !

நரக வாசல்களையோ

அடைத்து விடும் பூட்டும் இது !

ஆன்மாவுக்கு இது

கூட்டுப் புழு பருவம் !

ஞான மலர்தேடி 

தேனெடுக்க உதவுகின்ற

வண்ணச் சிறகுகள்

வளர்வது இதிலேதான் ! 

பருகாமல் உண்ணாமல் 

பட்டினி கிடந்து விட்டால் 

நோன்பாகி விடாது !

ஐம்பொறியும் உறுதியுடன்

அனுஷ்டிக்கும் விரதமிது !

புறம்பேசல் என்னும்

இறந்த சகோதரனின்

இறைச்சி உண்ணும்

அநாகரீகம்

நடத்தாமல் இருப்பதே

நாவின் நோன்பு !

அழுகிய வார்த்தைகளை

அருந்தாமல் இருப்பதே

செவியின் நோன்பு !

ஆபாசம் கண்டால் 

அருவெருப்பதே

கண்ணின் நோன்பு !

ஆசைகள் பரிமாறும் 

அறுசுவை விருந்தை 

மறுப்பதே

மனத்தின் நோன்பு !

இந்த உலகத்தின்

இன்பங்கள் என்ன

அந்தக் 

கதிர்நிலவைக் 

கொண்டுவந்து 

கைகளிலே கொடுத்தாலும் 

சொர்கத்தின் எல்லா

சுகங்களையும் கொண்டுவந்து

காலடியில் வைத்தாலும்

இறைவா ! உன்

அன்பின் முன் இவையெல்லாம்

தூசு என்று

எட்டி உதைக்கின்ற

ஏற்றத்தைப் பெற்றுவிட்டால்

அதுதான்

ஆன்மாவின் நோன்பு !

இந்தப் பக்குவம்

எய்திவிட்டால் 

பின்

உறக்கமும் 

வணக்கமாகிவிடும் !

சுவாசமே தஸ் பீஹு 

ஆகிவிடும் ! 

பிரார்த்தனை பிறகு

தேவை இல்லை -

தனியாக !

ஏனென்றால்-

நாமே 

பிரார்த்திக்கப்படும் 

பொருளாய் ஆகிவிடுகிறோம் !

 

நன்றி : சிராஜ் 1983 -ஜூலை )




Poetry
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..