Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள்
Posted By:Hajas On 12/31/2017 8:54:34 AM

மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள்

Peer Mohamed

31 December 2017

 

இந்த பதிவு நமதூரில் வாழும் அனைத்து இன , மதம் சார்ந்த மக்களுக்கு ஊரின் தற்கால நிலையறிந்து பதிவு செய்கின்றேன்.


மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள். மனிதன் தனித்து வாழ முடியாது.. அவனுக்கு உடற் பசி மட்டுமல்ல, மனப் பசிகளும் உண்டு . அதனால் அவனுக்கு உணவு, உடை, உரையுள்ள என்ற அடிப்படைத் தேவைகள் மட்டுமல்ல, கலை, இலக்கியம், பொழுதுபோக்கு, ஆன்மிகம் என்று எத்தனையோ தேவைகள்.

இவற்றையெல்லாம் ஒரு மனிதன் தானே செய்துகொள்ள முடியாது. நாம் உண்ணுகிறோமே, அரிசி. அது ஆயிரக்கணக்கான மனிதர்களின் வியர்வை.

நாம் அணிகிறோமே ஆடை, அதற்காக ஊடும் பாவுமாய் அலைந்தவர்கள் எத்தனை பேரோ?

நாம் வாசிக்கிறோமே வீடு, அதன் சுகம் எத்தனையோ பேருடைய சிரமத்தின் பயன்.

நம் உணவை நாமேதான் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தால் நம் கடைசி உணவை
கூட நம்மால் அடைய முடியாது.

நம் உடையை நாமேதான் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தால் நம்முடைய கடைசி உடையான கபன் துணியை கூட நாம் பெற முடியாது.

நம் வீட்டை நாமேதான் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தால் நாம் கட்டும் வீடே நமக்குக் கல்லறை ஆகிவிடும்.

இதைத் தெரிந்து கொண்டால்தான் மனிதன் சமூகம்  என்ற அமைப்பை உருவாக்கினான். 'உனக்கு நான் உதவுகிறேன். எனக்கு நீ உதவு' என்ற அறிவார்ந்த ஒப்பந்தந்தான் சமூக அமைப்பின் அடிப்படை.

சமூகம் என்ற அமைப்பு ஏற்பட்ட பின்னால்தான்  மனிதன் நாகரிகப் படிகளில் வேகமாக ஏறினான். மனிதன் எழுத்தைப் போன்றவன். அவன் மற்ற மனிதர்களோடு அச்சுக் கோத்துக் கொண்டு வாக்கியமாகும் போதுதான் அர்த்தம் பெறுகிறான்.

தனி மனிதன் நீர்த் துளி போன்றவன். அவன் மற்றவர்களோடு சேர்ந்து சமுத்திரமாகும் போதுதான் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். நம்முடைய முயற்சி எதுவுமின்றியே நாம் சமூகத்தின் உறுப்பினர் ஆகிவிடுகிறோம். மனிதனாகப் பிறப்பதே அதற்கான அனுமதி ஆகிவிடுகிறது.

நாம் இந்த உலகத்திற்கு வரும் முன்பே நமக்கு வேண்டியதையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு  காத்திருக்கிறது சமூகம். சமூகம் என்ற ஓர் அமைப்பு உருவாகாமல்  இருந்திருந்தால் நாமும் நம்முடைய ஆதி மூதாதையர் போல இடுப்பில் இலை தலைகளைக் கட்டிக்கொண்டு, இருட்டுக்கும், இடிக்கும் பயந்துகொண்டு, பசி எடுக்கம் போதெல்லாம் காட்டில் மான்களைத் துரத்திக் கொண்டு ஓட வேண்டியிருந்திருக்கும்.

இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதியும், ஒவ்வொரு சுகமும் நம்முடைய முன்னோர் விதை நட்டு
வியர்வை பாய்ச்சி வளர்த்தன சமூகம் என்ற மரத்தின் கனிகளே. நாம் ஒவ்வொருவரும் சமூகத்திற்குக் கடன்
பட்டிருக்கிறோம்.

நதி தன் நீரைத் தானே குடிப்பதில்லை. மரம் தன் தேனைத் தானே சுவைப்பதில்லை. விளக்கு தன் வெளிச்சத்தைத் தனக்காக் வைத்துக் கொள்வதில்லை. மனிதன் மட்டுமே தன்னுடையதைத் தான் மட்டுமே
அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அவன் தன்னுடையவை என்று நினைப்பவை உண்மையில் அவனுடையவை அல்ல என்பது அவனுக்குத் தெரிவதில்லை.

மனிதன் அடையும் ஒவ்வொன்றம் சமூகத்திலிருந்து பெற்றதுதான். ஒருவருக்கொருவர் உதவிகொண்டு வாழ்வது என்பதுதான் சமூகத்தின் ஆதார விதி. இந்த விதியை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு சமூகத்தில் இடமில்லை.

சமூகத்திலிருந்து பெறுகிறவன் திருப்பித் தரக் கடன் பட்டிருக்கிறான். இந்தக் கடனை எப்படித் திருப்பித் தருவது? நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அது எந்த  வகையிலாவது சமூகத்திற்குப் பயன்படக் கூடியதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

பயன்படக் கூடியது என்றால் செய்யுங்கள். இதனால்  நீங்கள் கடனை அடைப்பவர்கள் ஆவீர்கள். பயன்படாது; தீமைதான் விளையும் என்றால் செய்யாதீர்கள். அப்போதும் நீங்கள் கடனை  அடைப்பவர்கள் ஆவீர்கள்.

ஒரு சமூக அநீதி நடக்கிறதென்றால் அதைத் தடுக்க முயலுங்கள். நீங்கள் கடனை அடைப்பவர்கள் ஆவீர்கள்.

வயிற்றுக்குப் பசிக்கிறது என்பதற்காக வாய் உணவு  உண்கிறது. நீங்களும் வாயாக இருங்கள். கடனை  அடைப்பவர்கள் ஆவீர்கள்.

உடலுக்கும் நோய் என்றால் வயிறு பத்தியம் இருக்கிறது. நீங்களும் வயிறாக இருங்கள். கடனை  அடைப்பவர்கள் ஆவீர்கள். இடையில் இருக்கும் உடை நழுவும் போது கை  விரைந்து சென்று காப்பாற்றுகிறது. நீங்களும் கையாக இருங்கள்.கடனை அடைப்பவர்கள் ஆவீர்கள்.

மூளை வெளிச்சம் பெருவதற்க்காக் காது அறிவுரை  கேட்கிறது. நீங்களும் காதாக இருங்கள். கடனை  அடைப்பவர்கள் ஆவீர்கள்.

உடலில் எந்த உறுப்பு காயம் பட்டாலும் கண்  அழுகிறது. நீங்களும் கண்ணாயிருங்கள். கடனை அடைப்பவர்கள் ஆவீர்கள்.

உங்களுக்கும் அறிமுகம் அற்றவனை அன்னியன் என்று நினைக்காதீர்கள். யாரையும் பகைவன் என்று வெறுக்காதீர்கள். உங்களுக்கும் தெரியாமல் இவர்களுடைய வியர்வை  உங்கள் வயல்களுக்குப் பாய்ந்திருக்கலாம்.

பகைவனையும் நேசிப்பது என்பது ஏதோ பெரிய தெய்விகப் பண்பு என்று நினைக்காதீர்கள். அது நீங்கள் செலுத்த வேண்டிய கடன். பொதுநலம் செய்கிறோம் என்று பூரிப்படையாதீர்கள். நீங்கள் கடனைத்தான் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் பிறருக்குத் தருவது வேறொரு வடிவத்தில் உங்களுக்கே வந்து சேருகிறது.


இறைவன் அதை நமக்கு பல வாய்புகளின் வாயிலாக கொண்டுவந்து சேர்க்கிறான் அதை நாம் சரியான வழியில் சமூகத்தின் மேன்பாட்டுக்கு பயனுள்ளதாக ஆக்கிகொள்ள வேண்டும். அதனால் தான் இஸ்லாத்தில் செல்வவரியன 'சக்காத்' கட்டாயம் ஆக்க பட்டுள்ளது 'சதக்க' தானம், தர்மம் வளியுறுத்தப்பட்டுள்ளது பிறர்க்கு உதவுவதில் பொருளால், சிந்தனையால், உடலால்,மனதால் உதவி செய்வதை குர்ஆன், ஹதீஸ் நமக்கு பலஇடங்களில் அறிவுருத்தி காட்டுகிறது...

ஆகவே நண்பர்களே நானும், நீங்களும் நம்மை சேர்ந்த அத்தனை பேரும் சமுகத்திற்கு கடனாளியாக இருக்கின்றோம்...இந்த கடனை நாம் எப்படி அடைக்க போகின்றோம்? நம்முடைய எண்ணங்களை, எழுத்துக்களை அறிவுபூர்வமாக  ஆக்கபூர்வமாக, சமூகத்திற்கு நல்ல பல செய்திகளை இதில் பதிவு செய்து நமதூர் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கலாகிய இளைய தலைமுறைக்கு சிந்தனைக்கு விருந்தாய், செயலுக்கு மருந்தாய் நிறைய செய்தி சொல்வோம். வாருங்கள் நண்பர்களே, இந்தப் பகுதியில் உற்சாகமாய் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!


இதன் மூலம் நாம் இறைவனுக்கும் சமூகத்திற்கும் நன்றி கடன் அடைப்போம்.

நன்றி - பீர் முஹம்மத்...

https://www.facebook.com/groups/baithussalam/permalink/1538656249536420/

 

 






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..