▪︎சாணமே உணவாய்... ---------------------------- காடுகளில் வாழும் மலவண்டு இலை தழைகளை உண்ணும் விலங்குகளின் கழிவை உணவாகக் கொள்கின்றது. ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு என்பதின் அடையாளம் மலவண்டுகள். இயற்கையின் படைப்பில் எதுவும் கழிவில்லை. சில மலவண்டுகள் குறிப்பிட்ட ஒரே விலங்கின் சாணத்தைத் தேடி உண்பதை காட்டுயிர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்!
▪︎உடலமைப்பு ------------------- சாணி உருட்டும் வண்டுகளின் தலை இரும்பைப்போல் உறுதியானவை. மண் வெட்டியைப்போல் செயல்படும் இதன் உணர் கொம்புகளால் சாணத்தை வழிக்கவும் புரட்டவும் முடியும். இவை 3 மி மீ அளவிலிருந்து 3 செ மீ அளவு வரை காணப்படுகிறது.
▪︎காடுகளின் தோட்டி --------------------------- மாடு மற்றும் யானையின் சாணம் இவற்றுக்கு மிகவும் பிடித்தமானது. லட்சக்கணக்காக விலங்குகள் வாழும் காட்டில் அவை இடும் டன் கணக்கான சாணத்தை மல வண்டுகள்தான் தின்று காட்டை தூய்மைப் படுத்து கின்றன என்று சொன்னால் அது மிகையில்லை.
▪︎மண்ணுக்கு உரம் -------------------------- மலவண்டு விவசாயத்திற்கு மிகப்பெரிய உதவி செய்கிறது. இது சாணத்தை எளிய பொருளாக்கி மண்ணுக்கு அடியில் கொண்டுபோய்ச் சேர்ப்பதால் மண்ணுக்கு சிறந்த உரமாகவும் மாறுகிறது.
▪︎அபாரமான மோப்ப சக்தி ----------------------------------- சாணி வண்டுகள் நல்ல மோப்பசக்தி கொண்டவை. தூரத்தில் சாணம் இருப்பதையும் கண்டறிந்து வேகமாக இடத்தை சென்றடையும். எவ்வளவு உயரமாக, பெரிதாக சாணம் கொட்டிக்கிடந்தாலும் அவற்றைத் தன் தலையில் உள்ள மண்வெட்டி போன்ற அமைப்பால் வெட்டிச் சரித்து கூட்டமாகத் தின்று தீர்க்கும்.
▪︎அதிசயமான வாழ்வுச்சுழற்சி ---------------------------------------- மழைபொழிந்து மண் ஈரமாக உள்ள காலத்தில் மல வண்டுகள் தனது துணையைத் தேடும். தனக்கான பெண் துணையை ஈர்க்க ஆண்வண்டு சாணியை உருட்டி நகர்த்திச் செல்லும். எவ்வளவு பெரியதாக உருட்டுகிறதோ அந்த அளவு பெண்வண்டு கவரப்படும்.
ஈர்க்கப்பட்ட பெண்வண்டு உல்லாசமாக சாணி உருண்டை மீது ஏறி அமர்ந்துகொள்ளும். பாதுகாப்பான இடம் ஒன்றை தேர்ந்தெடுத்து அங்கே இருவண்டுகளும் சேர்ந்து ஆழமான பொந்து ஒன்றைத் தோண்டும். தான் உருட்டி வந்த சாணி உருண்டையை எளிதாக உள்ளே எடுத்துச்செல்லும் அளவிற்கு பொந்தின் விட்டம் இருக்கும்.
பொந்துக்குள் சாணி உருண்டையைக் கொண்டு சேர்ந்தபின் ஆணும் பெண்ணும் இணையும். அந்த மகிழ்ச்சியை, கொண்டுவந்த சாணி உருண்டை தீரும் வரை அங்கேயே தங்கிக் கொண்டாடும். பின்னர் அந்த பொந்து இருக்கும் இடத்தை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு மீண்டும் சாணம் தேடிப் போகும். முட்டை இடும் காலம் வந்தவுடன் மீண்டும் ஆணும் பெண்ணும் சேர்ந்து சாண உருண்டைகளை உருட்டிவரும். இம்முறை பெண்வண்டும் சேர்ந்து உருட்டும்.
▪︎வெயிட் தூக்கும் சாம்பியன் -------------------------------------- பொதுவாக இவை தன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்க வல்லவை. இவ்வளவு கனமான சாணி உருண்டையை எளிதாக உருட்டி தன் வளைக்குக் கொண்டு செல்ல சில நுட்பங்களை கையாளுகிறது.
தனது சிறிய முன்கால்களை மண்ணில் வைத்து, நீளமான பின்கால்களால் சாண உருண்டையை (ஏலேலோ ஐலசா சொல்லி...!) தள்ளுகிறது. ஒரு வண்டு பின்னிருந்து தள்ளவும், இன்னொரு வண்டு முன்னிருந்து இழுக்கவும் செய்யும்.
வழியில் வேறு வண்டுகள் இதனை திருட வரலாம். அவ்வாறு வந்தால் ஒருமணி நேரம்கூட சளைக்காமல் சண்டைபோடும். அட.. சாணிக்கு போய் ஒருமணி நேரச் சண்டையா... சீ... என முகம் சுளிக்கிறீர்களா...?அது அதன் உணவு. அதுவே அதன் சொத்து. அதனால் அது சளைக் காமல் சண்டை போடுகிறது.
▪︎தொழில் நுட்ப வல்லுநர் ---------------------------------- சாணியை தின்னும் வண்டுதானே என அலட்சியமாக எண்ணிவிடவேண்டாம். இந்த வண்டுகளுக்கு GPS தொழில் நுட்பமும் தெரியும். பெரிய சாணஉருண்டையை காட்டின் பல மேடுபள்ளங்களில் தனது இருப்பிடம் நோக்கி எடுத்துச் செல்லும்போது வழிமாறி வேறு எங்கும் சாண உருண்டை உருண்டுவிழலாம்.
அப்போது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மூலம் தன் இருப்பிடத்தைக் கணித்து சரியான திசையில் சாணி உருண்டையை எடுத்துச் செல்கின்றன. இவ்வுலகில் மனிதன் தோன்றுவதற்கு சிலகோடி ஆண்டுகள் முன்பிருந்தே GPS தொழில்நுட்பத்தை இந்த வண்டுகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றன.
இன்னமும் கூட மனிதனிடம் உள்ள GPS இவ்வண்டுகள் அளவிற்கு துல்லியமானது கிடையாது. ---------------------------------------- ▪︎கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ