மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய விடுதலைப் புலிகள், அதற்கு அருகில் உள்ள செல்வநகர், பன்சால்வத்த, 64-வது மைல் போஸ்ட், கட்டபறிச்சான் ஆகிய இடங்களில் தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நடவடிக்கைதான், கிழக்கு மாகாணத்தில் யுத்தம் பெரிதாக தொடங்க வழிவகுத்தது என்றும் குறிப்பிட்டிருந்தோம் (பழைய அத்தியாயங்களை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்).
இது நடந்த நேரத்தில், இலங்கை ராணுவம் உடனடி யுத்தம் ஒன்றுக்கு தயாராக இருக்கவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த நேரம் அது. புலிகள் தாக்குதல் தொடுப்பார்கள் என ராணுவம் ஊகிக்கவில்லை. அதனால், புலிகள் தாக்குதலை தொடங்கிய உடனேயே, ராணுவம் அனைத்து இடங்களிலும் அலர்ட் ஆகவில்லை.
மூதூரில் புலிகள் நடத்திய தாக்குதலை சமாளித்து, தமது முகாம்களை மீட்கவே, ராணுவத்துக்கு 4 நாட்கள் பிடித்தது. புலிகளை மூதூரில் இருந்து வெளியேற்ற, 700 கடற்படையினரை மூதூருக்கு கொண்டுவர வேண்டியிருந்தது. அந்த நிலையிலும், அதற்கு அருகில் இருந்த ராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படவில்லை.
மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய புலிகள் தோப்பூரில் இருந்த இலங்கை ராணுவத்தின் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவின் தலைமை கேம்ப் மீது தாக்குதல் நடத்தினர். மூதூரில் இருந்து பின்வாங்கிய புலிகள், எதற்காக தோப்பூர் வரை சென்றார்கள் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.
செல்வநகர் ராணுவ முகாமில் இருந்த ராணுவத்தினர், புலிகள் தமது 152mm ஆட்டிலரி பீரங்கிகளை வீதியால் கொண்டு செல்வதை கண்டார்கள். அதை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்த தேவையான பலம், செல்வநகர் ராணுவ முகாமில் அப்போது இருக்கவில்லை. எனவே, பேசாமல் வேடிக்கை பார்த்துவிட்டு, இந்த தகவலை ராணுவ தலைமையகத்துக்கு அறிவித்ததோடு நிறுத்திக் கொண்டார்கள்.
இந்த நேரத்தில், தோப்பூர் ராணுவ முகாமுடன் அட்டாச்ட் ஆக இருந்த ராணுவ உளவுத்துறை ஆள் ஒரு தகவலை கொண்டு வந்தார்.அப்போது தோப்பூர் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவு முகாமுடன் அட்டாச்ட்டாக ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்த இருவர் இருந்தனர். அவர்களில் செனிவிரட்ன என்பவர் ஒருவர். தமிழ் பேசக்கூடிய அவர், தோப்பூரில் வசித்த மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டு இருந்தவர்.
இந்த செனிவிரட்ன ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என தோப்பூர் மக்கள் தெரிந்து கொண்டிருக்கவில்லை. ராணுவத்துக்கு உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் ஒரு கான்ட்ராக்ட் சப்ளையர் என்றே அவர் அங்கு அறியப்பட்டிருந்தார்.
புலிகள் மூதூரில் இருந்து முழுமையாக பின்வாங்கிய தினத்தன்று இரவு, அவர் ஒரு உளவுத் தகவல் கொண்டு வந்தார். அந்த தகவல் என்னவென்றால், தோப்பூருக்கு அருகேயுள்ள கிராமங்களில் இருந்த அனேக தமிழர்கள், தமது கிராமங்களை விட்டு வெளியேற தொடங்குகிறார்கள் என்பதே.
அவர்களிடம் விசாரித்தபோது, “மூதூரில் சண்டை நடந்ததுபோல இங்கும் நடக்கலாம் என்ற ஊகத்தில் வெளியேறுகிறோம்” என்ற பதில் வந்ததாம். அதற்கு செனிவிரட்ன கொடுத்த விளக்கம், “இவர்கள் ஊக அடிப்படையில் வெளியேறவில்லை. இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்த போகிறோம் என்று புலிகள் இவர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்”
இந்த தகவலும், கொழும்பில் இருந்த ராணுவ தலைமையகத்துக்கு போய் சேர்ந்தது. அவர்கள் அங்கே இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன், கிழக்கு மாகாணத்தில் சம்பவங்கள் கடகடவென நடக்க தொடங்கின.
செனிவிரட்ன தகவல் கொண்டுவந்த மறுநாளே, கட்டப்பறிச்சான் ராணுவ முகாமின் காவலரண் (சென்ட்ரி) மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இந்த காவலரண் கட்டப்பறிச்சான் ராணுவ முகாமுக்கு வெளியேயுள்ள சிறிய பாலம் ஒன்றில் இருந்தது.
அந்த தாக்குதலில், காவல் பணியில் இருந்த சில ராணுவத்தினர் காயமடைந்தனர். அதையடுத்து, காவலரணை கைவிட்டுவிட்டு, முகாமுக்குள் ஓடி வந்தார்கள் அவர்கள்.
அது நடந்தபோது, தோப்பூர் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவு ராணுவ முகாமின் பொறுப்பு அதிகாரியாக இருந்தவர், லெப். கர்னல் செனகா விஜேசூர்யா.
பழைய சம்பவங்களை யுத்தம் முடிந்தபின் நினைவுகூர்ந்த விஜேசூர்யா, “யுத்த நிறுத்தம் முடிந்து, மீண்டும் யுத்தம் தொடங்குவதற்கான ஆரம்ப அறிகுறிகள் இவை என்பதை அந்த நிமிடத்தில் நான் புரிந்து கொண்டேன்” என்றார்.
“எமது காவலரண் தாக்கப்பட்ட விஷயத்தை ராணுவ தலைமையகத்துக்கு அறிவிப்பதற்கு முன்னர், எமது ராணுவ முகாமின் அதிகாரத்தில் கீழ் வந்த சிறிய ராணுவ முகாம்களுக்கு உடனடியாக ‘ரெட் அலர்ட்’ அனுப்பினேன். ‘எந்த நிமிடத்திலும் உங்கள் முகாம், புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம். 24 மணி நேரமும் உஷாராக இருங்கள்’ என்ற எச்சரிக்கை கொடுத்துவிட்டே, தலைமையகத்துக்கு, காவலரண் தாக்கப்பட்டது பற்றி ரிப்போர்ட் செய்தேன்” என்றும் கூறினார் செனகா விஜேசூர்யா.
இவர் ரெட் அலர்ட் அனுப்பி சில மணி நேரத்தில், செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து, தோப்பூர் ராணுவ முகாம் ரேடியோ கன்ட்ரோல் ரூமுக்கு ஒரு தகவல் வந்தது.
|