வீட்டின் அத்தியாவசியத் தேவைகளில் பர்னிச்சர்களுக்கு முக்கிய இடம் உண்டு. சரியான விதத்தில் அவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது அதுவே வீட்டின் அழகையும் அந்தஸ்தையும் அதிகரித்து விடுகிறது.
சிலர் பர்னிச்சர் விஷயத்தில் தங்கள் ஆடம்பரத்தைக் காட்டுவதில் தான் குறியாக இருப்பார்கள். தெரிந்தவர்கள், உறவினர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக லட்சங்களை வாரியிறைத்து நகரில் எது புதுசோ, எது விலை அதிகமோ அதை தங்கள் வீட்டில் இட்டு நிரப்புவார்கள்.
இப்படி நிரப்பப்படும் பொருட்களால் அந்த வீட்டுக்கு புது அழகு வந்து சேருமா என்றால் அது தான் இல்லை. திணிக்கப்பட்ட விதத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஒரு வித அசவுகர்யத்தையே அது கொடுத்துக் கொண்டிருக்கும்.
வீடுகளில் உள்ளறை அலங்காரம் என்பது தனிக்கலை. பார்த்த மாத்திரத்தில் அழகும் அமைதியும் வந்து ஒட்டிக் கொள்கிற மாதிரியான அமைப்பு தான் இதன் சிறப்பு. இதில் பெருமைக்காக லேட்டஸ்ட் பர்னிச்சர்களை வாங்கி அலங்கரிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இது நமக்கு பயன்படக்கூடியதா என்று பார்ப்பதில்லை. நன்கு உழைக்கும் தன்மை கொண்டதா என்றும் யோசிப்பதில்லை. இந்த விஷயத்தில் வீண் பெருமைக்கு ஆசைப்பட்டு பர்னிச்சர்களை வாங்கிக் குவிக்கிறவர்களே அதிகம். இந்த மாதிரியான பொருட்கள் குறித்த காலத்திற்கு முன்பே வலுவிழந்து சேதாரம் அடையும் போது நஷ்டமும் அதிகம். மனக்கஷ்டமும் அதிகம்.
ஒரு வீட்டைப் பொறுத்தரையில் அதன் வரவேற்பு அறை முக்கியம். நம்மை சந்திக்க வருகிறவர்களின் பார்வையில் படும் இடமும் அதுவே தான். இந்த அறை பளிச்சென்றிருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கலையம்சம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். உறுத்தாத வண்ணம் முக்கியம். உள்ளறைகள் இளைஞர்கள், குழந்தைகளைக் கவர்கிற விதத்தில் தேவையான உபகரணங்களுடன் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். அதே நேரத்தில் பெரியவர்களின் சவுகர்யத்தையும் மனதில் கொண்டு அந்த அறைகள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும்.
பொதுவாக அறைகளுக்கு எந்த மாதிரியான பர்னிச்சர்கள் தேவை என்று முடிவெடுத்ததும் அதைத் தயாரிப்பதில் எந்தக் கம்பெனி திறன் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வது நல்லது. இரண்டொரு நாள் தாமதம் என்ற நிலை ஏற்பட்டால் கூட தரமானதையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
சில வீடுகளில் புதுப்பொருட்களை வாங்கியதோடு சரி.அப்புறமாய் அதை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும் என்று கூட தோன்றாமல் விட்டு விடுவார்கள். தினமும் அதை துடைத்து சுகாதார சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் தூசி படிந்து பார்க்க என்னவோ போல் காட்சி தரும். இது மாதிரியான அலங்காரப் பொருட்களை பெரும்பாலும் மண், தண்ணீர், தூசி ஆகியவற்றில் இருந்து பாதுகாத்தாலே போதுமானது.
சில வீடுகளில் சோபாவில் தலை வைத்த இடத்தில் எண்ணைக்கறை படிந்து பார்க்க என்னவோ போல் இருக்கும். தலை வைக்கிற இடத்தில் ஒரு கவரை பொருத்தி வைத்தால் இந்த மாதிரி எண்ணைப் பிசுக்கு எற்பட்டு சோபாவின்அழகைக் கெடுக்காது. அந்தக் கவரில் அழுக்கு படிகிற போது அதை சோப்புத்தூள் உபயோகித்து சுத்தப் படுத்துவதும் முக்கியம்.
இப்போது ரெடிமேட் யுகம். நினைத்தது நினைத்த நேரத்தில் கிடைக்கும். ஆர்டர் கொடுத்து செய்வதற்கெல்லாம் பொறுமை கிடையாது. நட்பு வட்டாரத்தில் இதுமாதிரி பர்னிச்சர் வாங்கியவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். பெரும்பாலும் தரமான பொருட்கள் வாங்கியவர்களின் அனுபவம் நிச்சயம் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கும். அந்த ஆலோசனையை பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் பர்னிச்சர்கள் வாங்கிய பிறகு அதன் உழைப்பு பற்றிய கருத்தில் மறு சிந்தனை இருக்காது.
சிலர் இருக்கிறார்கள். கடைகளில் கண்ணைக் கவரும் விதத்தில் அம்சமான சோபா செட்டைப் பார்த்து விட்டால் அந்த நேரமே அதற்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள். சோபா கம்பெட் வீட்டுக்கு வந்த பிறகு தான் அறையின் அளவை அது தாண்டியதாக இருப்பது தெரிய வரும். நமது வீட்டில் சோபா கம்பெட்டுக்கான அளவுக்கு இது சரியாக இருக்குமா என்பதை தெரிந்து கொண்டு அதன்பிறகு சரியான அளவில் ஆர்டர் கொடுக்கலாமே.
சில வீடுகளில் சோபா, மேசை, டிரஸ்சிங் டேபிள் போன்றவற்றை சுவருடன் ஒட்டிக் கொண்ட மாதிரி போட்டிருப்பார்கள்.சுவரை இடிக்கிற மாதிரி இல்லாமல் கொஞ்சம் இடைவெளி விட்டு போடுவதே சரியாக இருக்கும்.
இன்னும் சில வீடுகளில் பர்னிச்சர்கள் எவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளாத அந்த வீட்டுச் சிறுவர்கள், அதில் தாம்தூம் என்று ஏறிக்குதித்து சீக்கிரமே அதை பழுதாக்கி விடுவார்கள். விலை அதிகம் கொண்ட பொருள் இந்த மாதிரியான அறியாமையில் சீக்கிரமாய் வீணாய்ப் போகும் போது, அடுத்து புதிதாக வாங்கும் எண்ணம் கூடத் தோன்றாது போய்விடும். ஸ்டீல் பர்னிச்சர்களுக்கு அவை துருப்பிடிப்பதற்கு முன்பாகவே பெயிண்ட் அடித்து புத்தம் புதுசு தோற்றம் ஏற்படுத்தி விட வேண்டும்.
சிலர் தங்கள் வீட்டு பர்னிச்சர்கள் மேல் காலைத் தூக்கிப் போட்டுக் கொள்வார்கள். நாம் வாங்கியது தானே! அதை எப்படி உபயோகித்தாலும் யார் கேட்கப் போகிறார்கள் என்கிற மாதிரியான சிந்தனை இது.
இந்த எண்ணமே தவறு. முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ளும்போது பிள்ளைகளும் அதை பக்குவமாக பயன்படுத்துவார்கள்.பிளாஸ்டிக் உபகரணங்களை உபயோகப்படுத்துகிறவர்கள் அது அழுக்காகி அழகைக் கெடுக்கும்வரை காத்திருக்காமல் சோப்புத்தூள் கொண்டு சுத்தம் செய்து விட வேண்டும்.
அழகுணர்ச்சி இருக்கும் அளவுக்கு அதை பராமரிக்கும் தன்மையும் முக்கியம். இந்த இரண்டும் ஒருங்கே அமையப் பெற்றால் எப்போதுமே இப்படிப்பட்டவர்கள் வீட்டில் உள்ள பர்னிச்சர்கள் வீட்டின் அழகுக்கு அழகு சேர்ப்பதாகவே இருக்கும்.
http://www.dailythanthi.com/magazines/nyayiru_article_G.htm |