Posted by Haja Mohideen
(Hajas) on 11/5/2012
|
|||
தொல்லை தரும் குறுந்தகவல் "டிராய்' புதிய கட்டுப்பாடு நவம்பர் 06,2012,01:14 IST புதுடில்லி: மொபைல்போனுக்கு அனுப்பப்படும், தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு (குறுந்தகவல்) கட்டுப்பாடு விதித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, "டிராய்' உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மொபைல்போன்களில், மொபைல்போன் நிறுவனங்கள், சில சலுகைகளுடன் வழங்கும் எஸ்.எம்.எஸ்., மூலம், சில நிறுவனங்கள், தங்களது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன.
இதையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு கணக்கிலடங்கா எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி, தொல்லை கொடுத்து வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளன.இந்நிலையில், 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பும் ஒவ்வொரு தகவலலுக்கும் இனி, 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்', நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, டெலிமார்க்கெட்டிங்கில் ஈடுபடும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மொபைல்போன் வாடிக்கையாளர்களை இந்த உத்தரவு கட்டுப்படுத்தாது என்றும், "டிராய்' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, "டிராய்' முதன்மை ஆலோசகர் பரமேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த புதிய உத்தரவு, இரண்டு வாரத்திற்குள் நடைமுறைபடுத்தப்படும். இது, ஆரம்பகட்ட நடவடிக்கை தான். இதுபோல், இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து, மூன்று மாதத்திற்குள் தெரிவிக்கும்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.அதாவது, வர்த்தக ரீதியில், ஒரே மாதிரியான எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இருப்பினும், தங்கள் நிறுவனத்தை முறையாக பதிவு செய்து, வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொல்லை தரும் விளம்பரங்கள் குறித்து, மொபைல்போன் வாடிக்கையாளர்கள், யுசிசி என, டைப் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் போன் எண் மற்றும் தேதி போன்ற விவரங்களை டைப் செய்து, 1909 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு, பரமேஸ்வரன் கூறினார்.
தவறான தகவல் கொடுத்தால் நடவடிக்கை
"மொபைல்போன் இணைப்பு பெற, தவறான தகவல்களை அளிக்கும் வாடிக்கையாளர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்படும்' என, தொலைத்தொடர்புத்துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து, தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, விண்ணப்ப படிவத்தில், அவர்கள் அளித்துள்ள புகைப்படத்துடன், ஒத்துப்போகிறதா என, சம்பந்தப்பட்ட, "சிம் கார்டு' விற்பனையாளர் பார்க்க வேண்டும். விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மைப் பற்றியும் உறுதி செய்தபின், அது குறித்த உறுதிமொழி படிவத்தையும் தொலைத்தொடர்பு துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். தவறான தகவல் அளித்து, மொபைல்போன் இணைப்பு பெற முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் குறித்து, போலீசில் புகார் அளிக்கப்படும்.இந்த புதிய நடைமுறைகள், வரும் 9ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |