Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 41
Posted By:Hajas On 2/11/2017 5:25:15 AM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 40: ஃப்ளாட்வூட்ஸ் அசுரன் (Flatwoods Monster)

Episode 41: நரை நிறத்தவர்கள் (Grey Aliens):

 Image may contain: text

 

நரை நிறத்தவர்கள் (Grey Aliens):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவர்கள் குறித்துத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவுக்கு மிகவும் பிரபல்யமான இனத்தவர்களாக இவர்கள் தாம் நமக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். வேற்றுக்கிரகவாசிகள் எனும் சொல் காதில் விழும் போதே ஒவ்வொருவர் மனக்கண்ணிலும் வந்து போகும் உருவத்துக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள் தாம்.

இதுவரை நமது முப்பரிமாண உலகுக்குள் ஊடுருவும் பல்வெறுபட்ட வேற்றுக்கிரகவாசி இனத்தவர்களுள், நரைநிற வேற்றுக்கிரகவாசிகள் (Grey Aliens) என்று அழைக்கப்படும் இவர்களே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஊடுருவுகிறார்கள்.

இதுவரை உலகளாவிய ரீதியில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து உத்தியோகபூர்வமாகப் பதிவாகியிருக்கும் பலநூற்றுக் கணக்கான சம்பவங்களுள், அவுஸ்திரேலியாவில் 50% ஆகவும், அமெரிக்காவில் 43% ஆகவும், கனடாவில் 90% ஆகவும், ப்ரேஸிலில் 67% ஆகவும், ஐரோப்பிய துணைக்கண்டத்தில் 20% ஆகவும், இங்கிலாந்தில் 12% ஆகவும் பிரத்தியேகமாக நரை நிறத்தவர்களாகிய இவர்கள் பற்றிய சம்பவங்களே அதிகம் பதிவாகியிருக்கின்றன.

இவர்களது உடல் நரை நிறத்தில் (வெண் சாம்பல் நிறம்) இருப்பதையொட்டியே இவர்களுக்கு Grey Aliens என்ற பெயர் வழங்கப் பட்டிருக்கிறது. ஒல்லியன அவயவங்கள்; முடிகள் அற்ற, பெரிய வழுக்கைத் தலை; பாதாம் கொட்டையின் வடிவத்திலான கரிய நிறக் கண்கள்; மூக்கு ஒரு கட்டமைப்பாக இல்லாமல், இரண்டு சிறிய மூக்குத் துவாரங்களை மட்டுமே கொண்ட முகம்; சிறிய மெல்லிய உதடுகள்; காதுகள் இல்லை; கைகளில் பெருவிரலோடு சேர்த்து மூன்று அல்லது நான்கு விரல்கள்... போன்ற அங்க அடையாளங்களைக் கொண்டவர்கள் இவர்கள்.

ஒரு தேன் கூட்டில் இருக்கும் பல்வேறுபட்ட தேனீக்களுக்கும், அவை செய்யும் பணிகளுக்கு ஏற்ப சற்று மாறுபட்ட உடல் கட்டமைப்புக்கள் இருப்பது போல், இந்த வேற்றுக்கிரகவாசி இனத்தவர்களுக்குள்ளும் அவரவருக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் பட்டிருக்கும் பணிகளுக்கு அமைய சற்று மாறுபட்ட உடற்கட்டமைப்புக்களை உடைய ஒருசில பிரத்தியேகமான உட்பிரிவினர் இருக்கிறார்கள்.

ஒரு பிரிவினர் குட்டையானவர்களாகவும், இன்னொரு பிரிவினர் நெட்டையானவர்களாகவும் இருப்பார்கள். குட்டையானவர்கள் சுமார் 3-4 அடி உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். நெட்டையானவர்கள் கிட்டத்தட்ட 6-7 அடி உயரம் கொண்டோராகவே இருப்பதுண்டு.

பொதுவாக நெட்டையானவர்களை விட குட்டையானவர்களே அதிக எண்ணிக்கையில் வருகை தருவதுண்டு. குட்டையானவர்களைப் பொருத்தவரை, இவர்கள் வேலையாட்கள் போன்ற ஓர் இனத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் வேலை வாங்கும் முகாமையாளர்கள் போலவே அனேகமான சந்தர்ப்பங்களில் நெட்டையானவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

மேலும், இவர்களுள் ஒரு சாராருக்கு உடலில் எந்தவிதமான பாலுறுப்புக்களும் இருப்பதில்லை. இன்னொரு பிரிவினருக்கு, மனிதர்களுக்கு இருப்பது போலவே ஆண், பெண் என்று பாகுபடுத்தப்பட்ட பாலுறுப்புக்கள் இருக்கின்றன.

பறக்கும் தட்டுக்கள் குறித்த சம்பவங்களில் அனேகமானவை இந்த இனத்தவர்களைப் பற்றியதாகவே இருக்கிறது. ஏனைய இனத்தவர்களை விட இவர்களே அதிக எண்ணிக்கையில் வருகை தருகிறார்கள். ஏற்கனவே நாம் இரண்டாவது தொடரில் பார்த்த “1937ம் ஆண்டு ரொஸ்வெல்” சம்பவத்தின் போது விபத்துக்குள்ளான பறக்கும் தட்டிலிருந்து குற்றுயிராக மீட்கப்பட்ட வேற்றுக் கிரகவாசிகள் கூட இந்த இனத்தவர்கள் தாம்.

விஞ்ஞானம், தொழினுட்பம் ஆகியவற்றில் மனிதர்களை விடப் பல மடங்கு முன்னேற்றம் கண்ட ஓர் இனத்தவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். அனேகமான நேரடி சந்திப்புக்கள் (Close Encounters of the third Kind), ஆள் கடத்தல் சம்பவங்கள் (Close encounters of the fourth kind) போன்றவற்றில் நேரடியாகச் சம்பந்தப்படும் வேற்றுக்கிரகவாசி இனத்தவர்களுள் அதிகமானோர் இந்த நரை நிறத்தவர்கள் தான் என்பது பல விரிவான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் பட்ட உண்மை.

பொதுவாக இவர்கள் மனிதர்களைக் கடத்திச் சென்று, அவர்களது உடல்களில் சில தொழினுட்ப ரீதியான ஆய்வுகளை நடத்தி விட்டு, மீண்டும் அவர்களை உயிரோடு கொண்டு வந்து, விட்டுச் செல்வார்கள். மனித உடல்கள் மீது இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் போது குறிப்பாக, சில சத்திரசிகிச்சைகள் மூலம் கடத்தப்பட்டவர் உடலுக்குள் சில நுண்சில்லுகள் (micro chips) போன்ற கட்டமைப்புக்களைப் புகுத்துதல், மனித உடலின் பல்வேறு இடங்களிலிருந்து DNA மாதிரிகளைச் சேகரித்தல், கடத்தப் பட்டவர் ஆணாக இருந்தால், பிரத்தியேகமாக அவரிடமிருந்து விந்து மாதிரிகளைச் சேகரித்துக் கொள்ளுதல் போன்ற விசித்திரமான பல பரிசோதனைகளைக் கடத்தப்பட்டோர் உடல்களில் இவர்கள் செய்வது வழமை. இவற்றுக்கான நோக்கம் / காரணம் என்னவென்பது இன்னும் முழுமையாகப் புலப்படவில்லை.

இவர்கள் குறித்த ஏராளமான உண்மைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. கட்டுரையின் சுருக்கம் கருதி பிரசித்தி பெற்ற ஓரிரு சம்பவங்களை மாத்திரம் உதாரணத்துக்கு இங்கு மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். மேலதிகமாக ஆய்வு செய்ய விரும்புவோர், கட்டுரையின் இறுதியில் வழங்கப்படும் இணைப்புகள் வாயிலாகத் தேடல்களை மேற்கொள்ளலாம்.

சம்பவம் 1 - பார்னி ஹில்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பார்னி ஹில் (Barney Hill), மற்றும் பெட்டி ஹில் (Betty Hill) ஆகிய இருவரும் அமெரிக்க தம்பதியினர். 1961ம் ஆண்டு, நியூ ஹாம்ப்ஷயர் (New Hampshire) எனும் ஊரின் புறநகர்ப் பகுதியை ஒட்டிய ஓரிடத்தில் வைத்து இவர்கள் இருவரும் நரைநிற வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டார்கள். நரை நிறத்தவர்கள் மூலம் கடத்தப்பட்டதாக உத்தியோகபூர்வமாக நவீன வரலாற்றில் பதிவாகியிருக்கும் பிரதான சம்பவங்களுள் இதுவே முதல் சம்பவமாகக் கருதப் படுகிறது.

1966ம் ஆண்டு வெளியிடப்பட்ட, “The Interrupted Journey” எனும் பிரசித்தி பெற்ற நாவல் கூட இந்தச் சம்பவத்தையொட்டியே எழுதப் பட்டது. மேலும், 1975ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான பிரசித்தி பெற்ற தொலைக்காட்சித் திரைப்படம் “The UFO Incident” கூட இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்தே இயற்றப் பட்டது.

இந்தச் சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் அடங்கிய குறிப்புகள், எழுத்துப் பிரதிகள், ஆவணங்கள், ஒலி / ஒளி நாடாக்கள் போன்ற பல்வேறு சான்றுகள், நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக் கழகத்தில், சம்பவத்தின் நிரந்தர நினைவுச் சின்னங்களாக சேகரிக்கப் பட்டன. மேலும், ஜூலை மாதம் 2011ம் ஆண்டு, மாநில அரசின் “வரலாற்று வளங்கள்” பிரிவு, சம்பவம் நடந்த தளத்தை, “வரலாற்றுக் குறியீடு” என்று பெயரிட்டு உத்தியோகபூர்வமாக அடையாளமிட்டது.

சம்பவத்தின் சுருக்கம்:
1961ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் திகதி இரவு 10.30 மணியளவில் “ஹில்ஸ்” தம்பதிகள் விடுமுறையைக் கழிக்க நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்று விட்டுத் தமது வாகனத்தில் திரும்ப வந்து கொண்டிருந்தார்கள். வீதியில் ஒருசில வாகனங்களைத் தவிர அதிக வாகன நெருக்கடி இருக்கவில்லை.

நியூ ஹாம்ப்ஷயர், லான்காஸ்டர் எனும் ஊருக்குத் தென் புறத்தில் வானில் பிரகாசமான ஓர் ஒளியை மனைவி பெட்டி ஹில் தான் முதலில் அவதானித்தார். பார்னி, பயணிக்கும் பாதையைச் சரிபார்த்துக் கொண்டிருந்த போது, அவரது மனைவியோ வானில் ஓர் எரி நட்சத்திரத்தைத் தன் கணவனுக்குச் சுட்டிக் காட்டினார். ஆனால், இந்த எரி நட்சத்திரம் வழமை போல் மேலிருந்து கீழே விழுவதற்கு மாற்றமாகக் கீழிருந்து மேல் நோக்கிச் சென்றது.

வழமைக்கு மாற்றமாக இந்த எரி நட்சத்திரம் இருந்ததாலும், மேலே செல்லச் செல்ல அது அதிக வெளிச்சத்தோடு பெரிதாகிக் கொண்டே சென்றதாலும், பெட்டி தன் கணவனிடம் காரை நிறுத்தி விட்டு இந்த வெளிச்சத்தைக் கொஞ்சம் உன்னிப்பாக அவதானிக்கலாம் என்று கூறினார். அத்தோடு நீண்ட நேரம் காருக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் தமது நாயையும் சற்று நடக்க விடலாம் என்றும் அபிப்பிராயப் பட்டார். எனவே பார்னி இரட்டை மலை எனும் இடத்துக்கு அருகில் காரை ஓரமாக நிறுத்த, அனைவரும் காரிலிருந்து இறங்கினர். இரவில் கரடிகளின் நடமாட்டம் குறித்த அச்சம் அந்தப் பிரதேசத்தில் இருப்பது வழமையென்பதால், தனது காருக்குள் இருந்த கைத்துப்பாக்கியையும் பார்னி தற்காப்புக்காகக் கைவசம் எடுத்து வைத்துக் கொண்டார்.

பைனாகுலர் மூலம் வானில் தோற்றமளித்த ஒளியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பெட்டி, திடீரென்று அந்த ஒளியானது, இதற்கு முன் பார்த்திராத ஒரு விசித்திரமான விமானத்தின் தோற்றத்தில் சந்திரனுக்குக் குறுக்காகப் பல நிறங்களில் மின்னிக் கொண்டு பறப்பதைக் கண்டார். ஏற்கனவே தனது சகோதரியிடமிருந்து பறக்கும் தட்டுக்கள் குறித்த சில கதைகளைக் கேள்விப் பட்டது ஞாபகம் வரவே, இதுவும் அது போன்ற ஒன்றாக இருக்குமோ என்று பெட்டி சந்தேகித்தார்.

ஆனால், இது பறக்கும் தட்டாக இருக்குமோ என்று பெட்டி கூறியதை பார்னி ஏற்றுக்கொள்ளவில்லை; அது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை. அவரது பார்வையில் அது ஒரு சாதாரண விமானம் போலவே வெறுங்கண்ணுக்குத் தோன்றியது. தொடர்ந்தும் பெட்டி வற்புறுத்திக் கூறவே, தனது மனைவியிடமிருந்து பைனாகுலரை எடுத்து பார்னியும் சற்று உன்னிப்பாக அதைப் பார்க்க ஆரம்பித்தார். பைனாகுலர் மூலம் தெளிவாகப் பாத்த பிறகு பார்னியின் அபிப்பிராயமும் மாறியது. பைனாகுலர் மூலம் பார்த்துக் கொண்டே பார்னி, “நிச்சயமாக இது ஒரு விமானம் அல்ல...” என்று முனுமுனுத்தார்.

உடனே இருவரும் அவசரமாக ஓடி வந்து காரில் ஏறி, மலையின் மேல் ஏறும் ஒரு குறுக்குப் பாதை வழியாக மேட்டு நிலப்பகுதியை நோக்கி வண்டியை ஓட்டத் தொடங்கினர். ஆள் நடமாட்டமில்லாத இந்தக் குறுக்குப் பாதை வழியாகத் தொடர்ச்சியாக வானில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த விசித்திர விமானத்தை அவதானித்த படியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென்று மிகவும் சமீபத்தில் வந்த அந்த வானூர்தி, கனோன் மலையின் மேலிருக்கும் தொலைதொடர்பு கோபுரத்தின் மேலால் குறுக்காகப் பறந்தது. பறந்து சென்ற இந்த ஊர்தி, குறைந்த பட்சம் 60 அடி நீளமாவது இருக்கும் என்றும், பறக்கும் போதே அது தன்னைத் தானே சுழன்று கொண்டும் சென்றது என்றும் பெட்டியின் வாக்குமூலத்தின் போது குறிப்பிட்டார். இந்த ஊர்தி அங்கும் இங்குமாக வானில் அலைந்து கொண்டிருந்ததையே தம்பதிகள் இருவரும் வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தனர்.

குறுக்குப் பாதையிலிருந்து மீண்டு, திரும்பவும் நெடுஞ்சாலை வழியாகத் தம்பதிகளது கார் வந்து கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராத விதமாக இந்த வானூர்தி, தரையோடு ஒட்டினாற்போல் இவர்களது காருக்கு நேர் எதிரில் வந்து அந்தரத்தில் நின்றது. பாதையை அடைத்துக் கொண்டது போல் இந்த வானூர்தி வந்து எதிரில் நின்றவுடன் திடீரென்று பார்னி தடையை பிரயோகித்து வண்டியை நிறுத்த வேண்டியதாகி விட்டது.

பக்கத்தில் நெருங்கி வந்த பிறகே அது எவ்வளவு பிரும்மாண்டமான ஊர்தி என்பதைத் தம்பதிகளால் உணர முடிந்தது. எந்தப் பக்கம் பார்வை திரும்பினாலும், அதை அடைத்துக் கொண்டிருப்பது போல் தமக்கு மேலால் அந்தரத்தில் இந்த ஊர்தி தோற்றமளித்தது. அவ்வளவு பிரும்மாண்டமாக அந்த ஊர்தி இருந்த போதிலும், அதிலிருந்து எஞ்சின் இயங்குவது போன்ற எந்த விதமான சத்தமும் வெளிப்படவில்லை. பார்ப்பதற்கு அது Pancake ஒன்றின் தோற்றத்தில் இருந்ததாகவே பார்னியின் வாக்குமூலத்தின் போது குறிப்பிட்டார்.

கைத்துப்பாக்கியைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு பார்னி காரிலிருந்து இறங்கி, பறக்கும் தட்டை நோக்கி எச்சரிக்கையோடு நெருங்கலானார். பைனாகுலர் மூலம் அவதானித்துக் கொண்டே சென்ற போது பறக்கும் தட்டில் இருந்த ஒரு ஜன்னல் வழியாக உள்ளே கிட்டத்தட்ட பத்து வேற்றுக்கிரகவாசிகள் நின்று கொண்டிருப்பதை பார்னி கண்டார். அவர்கள் அனைவரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்னியால் உணர முடிந்தது. அவர்களுள் அனைவரும் உள்ளே இருந்த ஒரு சுவரை நோக்கி நகரத் தொடங்க, ஒன்று மட்டும் தொடர்ந்தும் பார்னியையே பார்த்துக் கொண்டிருந்தது. தொடர்ந்தும் பார்த்துக் கொண்டே இருந்த இந்த உருவம், திடீரென்று “அங்கேயே நில்; என்னையே பார்த்துக் கொண்டிரு” என்று அங்கிருந்தவாறே பார்னிக்குக் கட்டளையிட்டது.

விசித்திரமான சீருடைகளைப் போன்ற சில ஆடைகளை இந்த வேற்றுக்கிரகவாசிகள் உடுத்தியிருந்ததையும் பார்னியால் பைனாகுலர் மூலம் தெளிவாக அவதானிக்க முடிந்தது. திடீரென்று பறக்கும் தட்டின் பக்கவாட்டில் இருந்து சிவப்பு நிறத்திலான வெளிச்சத்தோடு ஏதோ ஒன்று வெளி நோக்கி நீளத் தொடங்கியது. அதே நேரம், பறக்கும் தட்டின் அடிப்புறத்தில் இருந்து ஏதோ ஒரு நீண்ட கட்டமைப்பு கீழ் நோக்கி இறங்கவும் தொடங்கியது. அதே நிலையில் அந்த ஊர்தி, எந்தவிதமான சத்தமும் இல்லாமல் பார்னியை இன்னும் நெருங்கி வந்து, தலைக்கு நேர் மேலாக அந்தரத்தில் நிற்கலாயிற்று.

அடுத்த கட்டம் என்னவென்பதை எப்படியோ உணர்ந்து கொண்ட பார்னி, நெஞ்சு படபடக்க கண்ணிலிருந்து பைனாகுலரை அகற்றி விட்டு திரும்பி வேகமாக ஓடி வந்து காரில் ஏறினார். கண்கள் மிரண்டு போய், பயத்தில் நடுநடுங்கிக் கொண்டு பார்னி, “அவர்கள் நம்மைக் கடத்தப் போகிறார்கள்” என்று பெட்டியிடம் கூறினார். இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே பறக்கும் தட்டு மறுபடியும் இடம் பெயர்ந்து, இவர்களது காருக்கு நேர் மேலாக வந்து அந்தரத்தில் நிற்கலாயிற்று. உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல், வண்டியை ஸ்டார்ட் செய்து, கடும் வேகமாக அங்கிருந்து ஓட்டலானார். வண்டியை ஓட்டிக் கொண்டே பெட்டியிடம் தொடர்ந்தும் அந்தப் பறக்கும் தட்டு தம்மைப் பின்தொடர்கிறதா என்று பார்க்குமாறு கூறினார்.

கார் கண்ணாடியைத் திறந்து பெட்டி தலையை வெளியில் நீட்டி அன்னாந்து பார்க்க எத்தனிக்கும் அதே கணத்தில் திடீரென்று சீரான தாள கதியில் ஒருவிதமான “பீப்” சத்தம் தொடர்ச்சியாகக் கேட்கத் தொடங்கியதோடு வாகனம் முழுவதும் சன்னமாக அதிரவும் ஆரம்பித்தது. மொத்த வாகனமும் மெலிதாக அதிர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், கூச்சம் போன்ற ஒரு வினோத உணர்வு இருவருடைய உடல் முழுவதும் பரவலாயிற்று. இந்தக் கட்டத்தில் அவர்கள் இருவரும் சுய நினைவோ, மயக்க நிலையோ அல்லாத, விவரிக்க முடியாத ஒரு புது விதமான மனநிலையை அடைந்தது போல் உணர்ந்ததாக ஹில் தம்பதிகள் இருவரது வாக்கு மூலங்களிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இவ்வாறு இருக்கும் போதே இரண்டாவது “பீப்” சத்தத் தொடர் கேட்கலாயிற்று. இந்த இரண்டாவது “பீப்” சப்தத்தோடு அவர்கள் மீண்டும் பழைய சுய நினைவு நிலைக்குத் திரும்பியதைத் தம்பதிகளால் உணர முடிந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது, ஏற்கனவே அவர்கள் இருந்த பிரதேசத்திலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் வேறோர் ஊரில் தாம் இருப்பதை இருவரும் கண்டுகொண்டார்கள். ஒரே கணப்பொழுதில் எப்படி ஐம்பது கிலோமீட்டர் தாண்டி வேறோர் ஊருக்குத் தாம் வந்தோம் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இடைப்பட்ட தூரத்தில் என்ன நடந்தது என்பது மொத்தமாக அவர்களுக்கு மறந்து போயிருந்தது.

என்ன நடந்ததென்று ஞாபகங்களை மீட்டிப் பார்க்க முயற்சித்த போது, சரியாக எதுவுமே ஞாபகம் வராமல் இருவரும் குழம்பிப் போயிருந்தார்கள். கடைசியாக நடந்த சம்பவங்களாக ஒரு குறுக்குப் பாதை வழியாகத் திடீரென்று வாகனத்தைத் திருப்பியதும், திடீரென்று எதிரில் பாதை மூடப்பட்டிருந்ததும், மற்றும் தூரத்தில் தீயினாலான பந்து போன்ற ஏதோ ஓர் ஊர்தி வானத்தில் பறந்து கொண்டிருப்பதும் மட்டுமே நினைவுக்கு வந்தன. வேறெதையும் அவர்களால் மீட்டிப் பார்க்க முடியவில்லை.

வீடு வந்து சேர்ந்தது முதல் இனம்புரியாத சில விசித்திர மாற்றங்கள் தம்மிடம் ஏற்பட்டிருந்ததைத் தம்பதிகள் அவதானிக்கலாயினர். உதாரணத்துக்கு, பயணப் பொதிகளை வீட்டினுள் வைக்காமல், கொல்லைப் புறக் கதவருகில் தான் வைக்க வேண்டுமென்று “பெட்டி” தன் கணவனிடம் காரணமில்லாமல் அடம் பிடித்தார். மேலும், சம்பவத்திற்குப் பிறகு வீடு வந்தது முதல் அவர்கள் இருவரது கடிகாரங்களும் ஓடவே இல்லை. மேலும், பார்னி தனது பைனாகுலரைப் பரிசோதித்துப் பார்த்த போது, அதன் லெதர் வார் அறுந்திருந்தது. ஆனால், அந்த வார் எப்போது, எப்படி அறுந்தது என்பது குறித்த எந்த ஞாபகமும் பார்னிக்கு இருக்கவில்லை. தன்னிடமிருந்த புதுக் காலணியின் முன் முனைகள் இரண்டும் உராய்ந்து புண்ணாகியிருப்பதை பார்னி அவதானித்தார். ஆனால், அது எப்போது எப்படி நடந்தது என்பதையும் அவரால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லை. இவ்வாறு பல குழப்பங்களுக்கு மத்தியிலேயே வீடு சேர்ந்தது முதல் தம்பதிகளது வாழ்க்கை ஆரம்பித்தது.

வீடு வந்து சேர்ந்தது முதல் தம்பதிகள் மிகவும் குழம்பிப் போயிருந்ததால், குறிப்பிட்ட பறக்கும்தட்டைப் பார்த்த நிமிடம் முதல் வீடு வந்து சேரும் வரை என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பதைத் தெளிவு படுத்திக் கொள்வதற்காகத் தமது ஞாபகங்களை முறையாக ஓர் ஒழுங்கில் மீட்டிப் பார்க்க இருவரும் முயன்றனர். என்ன தான் முயன்ற போதும், சன்னமான அதிர்வுடனும், கூச்ச உணர்வுடனும் கூடிய சிறியதொரு சப்தம் ஏற்பட்ட நிகழ்வு வரை மட்டுமே அவர்களால் மீட்டிப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு நடந்த சம்பவங்கள் எதுவும் முழுமையாக ஞாபகத்தில் வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அரைகுறை ஞாபகத் துணுக்குகள் மட்டுமே அவ்வப்போது மனக்கண்ணில் வந்து போயின. அவற்றை வைத்துத் தம்பதிகளால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை.

சில மணி நேரங்கள் அசந்து தூங்கிய பிறகு, கண்விழித்தெழுந்த பெட்டி, பிரயாண உடையைக் கூட இன்னும் கழற்றாமல் தான் உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். எனவே, எழுந்து சென்று உடையையும், காலணியையும் கழற்றி அலமாரியினுள் வைக்கும் போது தனது ஆடையில் பல இடங்கள் கிழிந்திருப்பதை அவதானித்தார். குறிப்பாக ஸிப்பர், சணல் நூலால் இழுத்துக் கட்டும் பகுதிகள், லைனிங் ஆகிய இடங்களில் ஆடை அதிகம் கிழிந்திருப்பதைக் கண்டார். பிறகு மீண்டும் அந்த ஆடையை வெளியில் எடுத்துப் பரிசோதித்த போது, ரோஜா நிறத்தில் பவுடர் போன்ற ஏதோ ஒரு பொடி ஆடை முழுவதும் ஒட்டிக் கொண்டிருப்பதையும் அவதானித்தார். அதை உதறிவிட்டு மீண்டும் ஆடையைக் கொழுவி வைத்தார். ஆனால், பழுதுபார்க்க முடியாத அளவுக்கு ஆடை மிக மோசமாகக் கிழிந்திருக்கவே, அதை வெறுப்போடு வீசியெறிந்தார். மீண்டும் மனதை மாற்றிக் கொண்டு அதை எடுத்து மறுபடியும் கொழுவி வைத்தார்.

சம்பவம் குறித்த முக்கிய தடயங்களுள் ஒன்றாக இருந்த இந்த ஆடை, பிற்காலத்தில் ஐந்து ஆய்வுகூடங்களில் பிரத்தியேகமான இரசாயண, மற்றும் தடயவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டது.

மேலும், பார்னி தம்பதியர் பயணம் செய்த காரின் ட்ரங்க் பகுதியில் பிரகாசமாக மின்னக் கூடிய இனம்புரியாத சில வட்டங்கள் இருந்ததையும் அவர்கள் அவதானித்தனர். இதற்கு முன் அவை தமது காரில் இருக்காததால், இந்தப் புது வட்டங்கள் என்னவாக இருக்குமென்று அவர்கள் பல விதங்களிலும் பரிசோதிக்கலாயினர். இறுதியில் திசைகாட்டும் கொம்பஸ் கருவி ஒன்றை அருகில் கொண்டு வைத்துப் பார்த்தனர். கொம்பஸ் அந்த வட்டங்களை நெருங்கும் போது அதன் காட்டி ஊசி படு வேகமாகச் சுழன்று கொண்டே இருந்ததாகவும், அதிலிருந்து சில அங்குலங்கள் கொம்பஸைத் தூரமாக்கும் போது வழமை போல் அதன் காட்டி ஓய்ந்து விடுவதாகவும் குறிப்பிடப் பட்டது.

இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 42 – நரை நிறத்தவர்கள் (தொடர்ச்சி 01)

 




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..