ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி "ஈ'' மருந்தை மிட்டாய் என்று தின்றதால் விபரீதம்
திசையன்விளை, ஜன.4-
"ஈ'' மருந்தை மிட்டாய் என்று நினைத்து தின்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
"ஈ'' மருந்தை தின்றனர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடி கல்லாம்பரம்பு என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் விநாயகம். இவருக்கு வினோத் (வயது 8), வினித் (7) விஜய் (6), விஷ்ணு (3) என்ற 4 மகன்களும், வினோதினி (2) என்ற மகளும் உள்ளனர்.
வீட்டில் "ஈ'' தொல்லையை போக்க விநாயகம் மருந்து வாங்கி வைத்து இருந்தார். அதை ஒரு காகிதத்தில் பொட்டலமாக பொதிந்து வீட்டின் அலமாரியில் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் விநாயகத்தின் குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அலமாரியில் இருந்த பொட்டலத்தைப் பார்த்தனர். உடனே அதை எடுத்து பிரித்தனர். அதில் "ஈ'' மருந்து சிறிய மிட்டாய் வடிவில் இருந்தது. அதை மிட்டாய் என்று நினைத்து தின்றனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
சற்று நேரத்தில் ஒருவர் பின்னர் ஒருவராக வாந்தி எடுத்தனர். உடனே அவர்களிடம் விநாயகம் விசாரித்தார். அப்போது பொட்டலத்தில் இருந்த ஈ மருந்தை சாப்பிட்டதை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மயக்கம் வருவதாக கூறினர். உடனே பதறிய விநாயகம் 108-க்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்சை வரவழைத்தார்.
உடனே குழந்தைகள் 5 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து உவரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=538044&disdate=1/4/2010&advt=2
|