நெல்லை, பாளை. கடைவீதிகளில் இறுதிகட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை மழையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது
நெல்லை, ஜன.14-
நெல்லை, பாளையங்கோட்டை கடைவீதிகளில் நேற்று இறுதிகட்ட பொங்கல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
தமிழர் திருநாள்
தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று காலை வீடுகளின் முன்பு பொங்கலிட்டு, தங்கள் வயல்களில் விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு அறுசுவை உணவு தயாரித்து சூரிய பகவானுக்கு படையலிடுவார்கள். அப்போது மாவிலை தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் குலைகளையும் வைப்பார்கள்.
பொங்கல் திருநாளையொட்டி புதுமண தம்பதிகளுக்கு மணப்பெண் வீட்டார் சார்பில் `பொங்கல் படி' கொடுப்பது வழக்கம். கடந்த 1-ந்தேதி முதல் நெல்லை கடைவீதிகளில் பொங்கல் படி, பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது. குறிப்பாக பாத்திரங்கள், மங்கலப் பொருட்கள் விற்பனை அமர்க்களமாக நடந்தது.
இறுதிகட்ட விற்பனை
இந்த நிலையில் நேற்று இறுதிகட்ட விற்பனை சிறப்பாக இருந்தது. நெல்லை டவுன் மற்றும் பாளையங்கோட்டை கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கரும்பு, மஞ்சள் குலைகளை மக்கள் போட்டி போட்டு வாங்கினர். மேலும் பச்சரிசி, அச்சு வெல்லம், மண்டவெல்லம் மற்றும் பொங்கலுக்கு தேவையான ஏலக்காய், சுக்கு போன்ற பொருட்களின் விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது. நேற்று முன்தினத்தைவிட நேற்று காய்கறிகளின் விலை சற்று குறைந்திருந்தது.
இதுதவிர மாட்டுப் பொங்கல் விழாவுக்காக, கால்நடைகளுக்கான புதிய கயிறுகள், கொம்புகளுக்கு அடிக்கும் பெயிண்டு வகைகள் விற்பனையும் நன்றாக இருந்தது. அவ்வப்போது மழை பெய்த போதிலும், மக்கள் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் பொங்கல் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=540378&disdate=1/14/2010&advt=2
|